தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 12 - முகில் தினகரன்
மணமக்கள் இருவரின் ஜாதகப்படி அன்றையே தினமே சாந்தி முகூர்த்தம் வைத்தாக வேண்டும், இல்லையேல் அடுத்து...ஐந்து மாதங்கள் கழித்துத்தான் சாந்தி முகூர்த்தம் வைக்கப்பட வேண்டும், என்று ஜோதிடர் ஆணித்தரமாய்க் கூறி விட, அன்றே....அந்த மண்டபத்திலேயே சாந்தி முகூர்த்தத்தையும் வைத்து விடுவது, என்று பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்.
முதலிரவு அறை.
தோழிப் பெண்களின் கேலி கிண்டல் மற்றும் சிரிப்புக்களோடு அறைக்குள் வந்து கதவைத் தாழிட்ட மல்லிகா அங்கே தனசேகர் இல்லாதது கண்டு அதிர்ச்சியானாள். “என்னது?...அவரைக் காணோம்!...எங்கே போனார்?”
ஒருவேளை பாத்ரூமிற்குள் இருப்பாரோ? என்றெண்ணி பாத்ரூம் அருகே சென்று, “என்னங்க....என்னங்க” என்று சன்னக் குரலில் அழைத்தவாறே கதவைக் கூர்ந்து பார்த்தாள். அது வெளிப்புறமாய்த்தான் தாழிடப்பட்டிருந்தது.
எதுவும் புரியாமல் அந்தக் கட்டில் மீதே நீண்ட நேரம் அமர்ந்திருந்தவள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
“அய்யய்ய...இதென்ன பொண்ணு முதலிரவு அறையிலிருந்து வெளிய வருது?...” பெரிய அத்தைக்காரி எழுந்து மல்லிகாவை நோக்கி வர,
“பயந்திட்டாளோ...என்னவோ?” சொல்லிக் கொண்டே சின்ன அத்தையும் கூட வந்தாள்.
“என்ன மல்லிகா...ஏன் வெளிய வந்திட்டே?” சத்தமில்லாமல் கிசு..கிசு...குரலில் கேட்டாள் அவள்.
“ம்ம்...எத்தனை நேரம்தான் நான் ஒருத்தி மட்டும் தனியா உட்கார்ந்திட்டிருக்கறது?” என்றாள் மல்லிகா கைகளைப் பிசைந்து கொண்டு.
“என்னது?...தனியா உட்கார்ந்திட்டிருந்தியா?...ஏன்?...மாப்பிள்ளை தூங்கிட்டாரா?” பெரிய அத்தை கேட்க,
“அவரு உள்ளாரவே இல்லை அத்தை” கோபமாய்ச் சொன்னாள் மல்லிகா.
“இல்லையே!...அவரு உள்ளாரதானே இருந்தார்...நான் பார்த்தேனே?” என்றாள் சின்ன அத்தை.
“நீங்க ரெண்டு பேரும்...அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போயிருந்த நேரமாப் பார்த்து இவரு எங்கியோ வெளிய போயிட்டார் போலிருக்கு” என்றாள் மல்லிகா.
“இதென்னம்மா கொடுமையாயிருக்கு?...எந்த ஆம்பளையாவது மொதல் ராத்திரிய விட்டுட்டு எங்காவது வெளிய போவானா?” பெரிய அத்தை வாயில் கையை வைத்துக் கொண்டு அங்கலாய்க்க,