“தப்பா சொல்லனும்னு சொல்லலை. இதெல்லாம் அன்னைக்கு சண்டைல வந்துச்சு...”
“அப்படி என்ன பேசினாங்க???”
“இரண்டு அண்ணனும் பேசி, சின்ன அண்ணா யூ.எஸ்ல இருக்குறது, பெரிய அண்ணா இங்கே அம்மாவோட இருக்குறதுன்னு முடிவு செய்திருந்தாங்களாம்...”
“ஆமா, எனக்கும் தெரியும். உன் அண்ணா சொன்னார்...”
“அது பெரிய அண்ணிக்கு தெரியாதாம்... அவங்களை கேட்காம அதெப்படி அண்ணனே முடிவெடுக்கலாம்? இரண்டு பசங்கள்ள ஒருத்தர் ஃப்ரீயா வேற நாட்டுக்கு போயிடுவார். ஒருத்தர் மட்டும் இங்கேயே இருந்து எல்லா பொறுப்பையும் எடுத்துக்கனுமா? இந்த மாதிரி நிறைய பேசினாங்க...”
மஞ்சு திகைத்து தான் போனாள்... வினோதினி இதை அப்படி எடுத்துக் கொள்வாள் என்று அவள் நினைத்ததே இல்லை...
ஆனால், ஷண்முகம் மனைவியிடம் சொல்லாமல் இருத்தும் சரி இல்லை தான்...
மஞ்சு அமைதியாகவே இருக்கவும், ஜோதியே மேலும் சொன்னாள்.
“கடைசில அம்மா நீங்க தனியா போறதுன்னா போங்க. இந்த மாதிரி சண்டை போடாதீங்கன்னு அவங்க நடுவே போய் சொல்லி நிறுத்த வேண்டியதா போச்சு... அண்ணன் நான் அப்படி போக மாட்டேன்னு சொல்லிட்டு எங்கேயோ கிளம்பிப் போயிட்டான்...”
“பாவம் அத்தை... அவங்க நல்லவங்களா இருந்தாலும் பிரச்சனைங்க அவங்களை தேடி வருது...”
“அன்னைக்கு அப்புறம் எனக்கு தெரிஞ்சு அண்ணாவும், அண்ணியும் பேசிக்குறது இல்லை... அண்ணி எங்களோடவும் பேசுறது இல்லை... ஒரே வீட்டுல இருந்துட்டு இப்படி பேசாம இருக்குறதும், அன்னியமா இருக்குறதும் எப்படியோ இருக்கு...”
மஞ்சுவிற்கு இந்த ‘அன்னிய’ உணர்வு புதிதில்லை... திருமணமான பிறகு ஜோதி & நிர்மலா வழியே அவளும் உணர்ந்தது தான்...!!! அதைப் பற்றி சொல்லாமல்,
“நான் வேணா வினோ கிட்ட பேசிப் பார்க்கிறேன் ஜோதி...” என்று ஜோதியை தேற்றுவதுப் போல சொன்னாள்.
“அவங்களை விட அண்ணன் கிட்ட பேசி பாருங்க... அவன் அண்ணிக்கு பிடிச்ச மாதிரி செய்தா எல்லாம் சரி ஆயிடும்!”
“அவர் கிட்ட நான் பேச முடியாது... உன் சின்ன அண்ணாவை வேணா பேச சொல்றேன்...” என மஞ்சு சொல்லி முடித்தாளோ இல்லையோ, திடீரென்று ஜோராக மழைக் கொட்ட தொடங்கியது...