தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 12 - பிந்து வினோத்
“எதுக்கு வினோ அப்படி சந்தேகமா பார்க்குறீங்க? நிஜமா தான் சொல்றேன். வீடு மாதிரி இன்வெஸ்ட்மென்ட் எதுவும் கிடையாது. இப்போ வாங்குனா சரியா தான் இருக்கும். பசங்க வளரும் போது அவங்களுக்கும் ஹெல்ப்ஃபுல்லா தான் இருக்கும்...” என்ற மஞ்சு சின்ன இடைவெளிக் கொடுத்து,
“யோசிச்சுப் பாருங்க வினோ... மாமா இறந்தப்போ ஜோதி ஆறு மாச பச்சைக் குழந்தைன்னு மனோஜ் சொன்னார்... அங்கே இருந்து அந்தக் குடும்பம் எங்கே வந்திருக்கு... அதெல்லாம் எப்படி நடந்துச்சுன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்... அத்தை இந்த மாதிரி டிவி, பெயின்ட் கலர் எல்லாம் முக்கியமன்னு நினைச்சிருந்தா என்ன ஆகி இருக்கும், சொல்லுங்க...” என மிக மிக ரகசியக் குரலில் மென்மையாக பேசினாள்...
மஞ்சு சொன்னது பிடிக்காமலோ என்னவோ, வினோதினி முகத்தை திருப்பிக் கொண்டு, நகர்ந்து செல்லும் காட்சிகளை சில வினாடிகள் பார்த்தாள்... பின் மறுப்பாக தலையை ஆட்டினாள்...
“நீ புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன் மஞ்சு... உனக்கு இதெல்லாம் சொல்றது ஈஸியா தான் இருக்கும்... ஏன்னா நீ இங்கே இருக்கப் போறது எத்தனை நாள்?? ஒரு மாசம்? இரண்டு மாசம்??? அதுக்கு அப்புறம் நீ போயிடுவ... எனக்கு அப்படி இல்லை...”
“நீங்க சொல்றது கரக்ட் வினோ... நான் இல்லைன்னு சொல்லலை... உண்மையா சொல்லப் போனா அப்படி போறது என்னுடைய சாயிஸ் இல்லை...!! ஆனால் உங்களுக்கு அப்படி இல்லையே... நீங்களே டிசைட் செய்யலாம்...”
“அப்படியா??? இப்போ நான் தான் எல்லாம் டிசைட் செய்றேனா???”
“உங்களுக்கு உங்க ஹஸ்பன்ட் மேல கோபம். அதை என்னால புரிஞ்சுக்க முடியுது...”
“பின்ன என்ன மஞ்சு, தம்பி வெளிநாட்டுக்கு போய் எங்கே வேணா இருக்கலாமாம், அண்ணன் மட்டும் கூடவே தான் இருக்கனுமாம்...!!!”
“அது அத்தை டிசைட் செய்தது இல்லையே, வினோ... அவங்களை எப்படி நாம தப்பு சொல்ல முடியும்... சில வீட்டுல மதர் இன் லா எப்படி எல்லாம் இருக்காங்க தெரியுமா... என் ஃபிரென்ட் அமுதா கிட்ட பேசினா கதை கதையா சொல்லுவா... ஒருவேளை அத்தை அந்த மாதிரி சும்மா சும்மா தொல்லை செய்றவங்களா இருந்தா கூட பரவாயில்லை... அவங்க இப்போ கூட உங்களுக்கு சப்போர்ட் செய்து தனிக்குடித்தனம் போறதா இருந்தா போங்கன்னு தானே சொல்றாங்க...”
“ப்ச்.. அதெல்லாம் சும்மா பொய் மஞ்சு... வெளி வேஷம்... இப்படி சொன்னா தான் அவர் போக மாட்டேன்னு சொல்வாருன்னு சொல்றாங்க...”