தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 15 - பிந்து வினோத்
“சாட்டர் டே சன்டே என்னக்கா ப்ளான்??” என்று மஞ்சுவிடம் கேட்டாள் சாதனா.
டிவி பார்த்துக் கொண்டிருந்த மஞ்சு வெள்ளிக்கிழமை இரவுக்கான சோம்பலுடன் யோசித்தாள்.
“பெரிய ப்ளான் ஒன்னுமில்லை சது... அம்மா கிட்ட இருந்து புது சமையல் ஏதாவது கத்துக்கலாம்னு இருக்கேன்...”
“ஐயையோ நல்லப் பொண்ணா மாறிட்டு வரீயே... அப்படி என்ன புதுசா அம்மா கிட்ட இருந்து கத்துக்க போற??? அதான் ஒன் இயரா ஒருத்தரை உன் சமையலால டார்ச்சர் செய்துட்டு இருக்கீயே...”
சாதனா மனோஜை பற்றி சொல்வது புரிந்து மஞ்சுவின் முகத்தில் பெரிய புன்னகை தோன்றியது...
“இன்னும் புது புது டிசைன்ல டார்ச்சர் செய்றதுக்கு தான் கத்துக்க போறேன் சது... முதல்ல தேங்கா பர்ஃபி கத்துக்கலாம்னு இருக்கேன்...” என்ற மஞ்சுவின் முகம் கூடுதலாக மலர்ந்து மின்னியது...
அக்காவின் முகத்தில் வந்த மாற்றம் சாதனாவின் கண்களை தப்பவில்லை... அதைப் பற்றி அவள் கேட்க முனைந்தப் போது, பிரேம்குமார் போன் வந்திருப்பதாக மஞ்சுவை அழைப்பது கேட்டது.
மனோஜ் இந்நேரம் ஆபிசில் இருப்பான்... வேறு யார், அமுதாவாக இருக்குமோ, என்ற கேள்வியுடனே போன் ரிசிவரை காதில் வைத்தாள் மஞ்சு...
“ஹலோ அண்ணி, நான் ஜோதி...” என்று ஜோதியின் குரல் போனில் ஒலிக்கவும், மஞ்சுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது...
“ஜோதி??”