தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 22 - பிந்து வினோத்
“மஞ்சு, நீ எதுவும் செய்ய வேண்டாம் ரெஸ்ட் எடு. லஞ்ச்க்கு பிரிட்ஜ்ல இருக்கு. டின்னர்க்கு ஆர்டர் செய்துக்கலாம். அது செய்றேன், இது செய்றேன்னு எதுவும் நீ செய்ய வேண்டாம். நான் முடிஞ்ச அளவு சீக்கிரம் வரேன், சரியா?”
மனோஜ்க்கு பதில் சொல்லாமல் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவனை கேலி மின்னும் கண்களும், புன்னகை மின்னும் இதழ்களுமாக எதிர் கொண்டாள் மஞ்சு.
கடந்த வெள்ளிகிழமை தான் வேலையில் மஞ்சுவின் கடைசி நாள்! மனோஜ் அவளுக்காக அட்லான்டா வந்திருந்தான். இருவருமாக அவள் தங்கி இருந்த அபார்ட்மென்ட்டை காலி செய்து, அருகே தெரிந்தவர்களிடம் விடைப் பெற்று, திங்களான இன்று காலையில் தான் சிகாகோ வந்து சேர்ந்திருந்தார்கள்...
மஞ்சு திடீரென மனம் மாறி வேலையை ராஜினாமா செய்தது மனோஜிற்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது... அவன் அதிகமாக அதைப் பற்றிய காரண காரியங்களை கேட்கவில்லை... மஞ்சுவும் அதைப் பற்றி அதிகம் சொல்லவில்லை...!
தன்னை முழுவதுமாக நம்பி வந்திருக்கும் மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள விரும்பினான் மனோஜ்... அதனால் தான் அவள் மீது கூடுதல் அன்பை பொழிந்துக் கொண்டிருந்தான்!!!
“சீரியஸா சொல்றேன் மஞ்சு. நீ திரும்ப வந்ததே எனக்கு சந்தோஷமா இருக்கு. உன்னை ராணி மாதிரி பார்த்துக்கனும்ன்னு ஆசை வச்சிருக்கேன். ஸோ, எதுவும் செய்யாதே!”
“நீங்க சொல்லலைனாலும் நான் செய்றதா இல்லை, போதுமா!” என்றாள் மஞ்சு புன்னகை பெரிதாக!
மனோஜ் காதலுடன் அவளின் கன்னத்தை வருடிக் கொண்டே அவளின் புன்னகையை ரசித்தான்.
“இந்த ஸ்மைல் தான்! முதல் நாள் பார்த்து மயங்கினவன் இன்னும் எழுந்திருக்கவே இல்லை...”