தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 23 - பிந்து வினோத்
மனோஜ் கிளம்பி சென்றப் பிறகு, சில மணித்துளிகள் இது அது என்று ஏதேதோ செய்துக் கொண்டிருந்த மஞ்சு, போரடிக்கவும் நேரத்தைப் பார்த்து விட்டு, அமுதாவை போனில் அழைத்தாள்.
அமுதா உடனடியாக அழைப்பை ஏற்றாள்.
“என்ன மஞ்சு அதிசயம், நீயே என்னைக் கூப்பிடுற?”
“போர் அடிச்சுது, என்ன செய்றது? கழுதை கெட்டா குட்டிச் சுவரு!”
“நீ கழுதையா இருக்கும் போது நான் சுவரா இருக்கலாம், தப்பில்லை!”
“உனக்கு நினைப்பு தான்...!!!! எப்படி இருக்க அமுதா? குட்டி பாப்பா எப்படி இருக்கா? சரா எப்படி இருக்கார்?”
“என்ன முக்கியமான ஒருத்தங்களை விட்டுட்ட?”
அமுதா சரவணனின் அம்மாவை மறைமுகமாக குறிப்பிடுவது புரிந்து,
“உன் கிட்ட பேசும் போது அவங்களை பத்தி கேட்பேனா???” என்றாள் மஞ்சு சிரிப்புடன்.
“அதானே! நாங்க நல்லா இருக்கோம் மஞ்சு, நீ எப்படி இருக்க? சிகாகோ வந்தாச்சா?”
“இன்னைக்கு காலைல தான் வந்தோம் அமுதா. எப்படி சொல்றதுன்னு தெரியலை, சந்தோஷமாவும் இருக்கு, கஷ்டமாவும் இருக்கு. ஒரு இம்பல்ஸ்ல வேலை வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்... இப்போ... நான் எடுத்த முடிவு சரியா தப்பான்னு புரியலை. கொஞ்சம் குழப்பமா இருக்கு.”
“நான் ஒன்னு சொல்லட்டுமா மஞ்சு? எதையும் தாங்கும் இதயத்தோட கேட்குறீயா?”