தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 02 - யாஷ்
“ஆதி, இது உனக்கே உனக்கான வாய்ப்பு. நீ கலந்துக்கிட்டா கட்டாயம் வெற்றி உனக்கே!”
சான்வி சிறுமியை போல துள்ளிக் குதித்தாள். ஆதித்யாவிற்கும் அவளின் மகிழ்ச்சியும், எனர்ஜியும் உத்வேகத்தைக் கொடுத்தது.
ஆனால் அவனின் அம்மா அமுல்யாவும், அப்பா ஷிவான்க்கும் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆதித்யாவிற்கு அவர்கள் அப்படி இருக்கும் போது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அக்காவை உதவிக்கு அழைப்பவனாக பார்த்தான்.
சான்வியும் உடனே புரிந்துக் கொண்டாள்.
“அம்மா, அப்பா, எதுக்கு இப்படி இருக்கீங்க? நம்ம எல்லோருக்குமே ஆதிக்கு ஜக்ருதியை எவ்வளவு பிடிக்கும்னு தெரியும். இது அவனுக்கு கிடைச்சிருக்க அருமையான வாய்ப்பு. என்கரேஜ் செய்ங்க. நாம எல்லோரும் மோட்டிவேட் செய்தா அவன் கட்டாயம் ஜெயிப்பான்,” என தம்பிக்கு பரிந்துக் கொண்டு பேசினாள்.
ஷிவான்க் மறுப்பாக தலையை ஆட்டினார்.
“என்னால இதை ஏத்துக்க முடியலை சான்வி. அவன் ஒன்னும் சின்னக் குழந்தை கிடையாது, கான்டெஸ்ட், போட்டின்னு சுத்திட்டு இருக்க. அவன் படிச்ச படிப்புக்கு ஒரு வேலையை தேடிட்டு மாசம் சம்பளம் வாங்கப் போறான்னு சொல்லு, நான் சந்தோஷப் படுவேன். அதை விட்டுட்டு லட்சக் கணக்கில செலவு செஞ்சு போட்டிக்காக போறது எல்லாம் வேஸ்ட்ன்னு தான் எனக்குத் தோணுது.”
“என்னப்பா நீங்க,” என சான்வி பேசும் போது, அமுல்யா குறுக்கிட்டாள்.
“அப்பா சொல்றது சரி தான் சான்வி. உனக்கு வயசு இருபத்தி ஒன்பது ஆகப் போகுது. அதோட ஒரே வருஷத்துல முப்பதை தொட்டுடுவ. உனக்கு நாங்க கல்யாணம் பார்க்க வேண்டாமா?