தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 29 - பிந்து வினோத்
மஞ்சு பொதுவாக பதவிகளை பெரிதாக நினைத்ததுக் கிடையாது. அவள் வேலை செய்த டீம்களில் வெளிப்படைத்தன்மை இருந்ததால், தகுதியானவர்களுக்கு சரியான பதவி உயர்வு, சம்பள உயர்வு தானாக கிடைத்து விடும். அதைப் பற்றி அதிகமாக யாரும் கேள்விகள் கேட்டது கிடையாது, அப்படி கேட்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதுக் கிடையாது.
மனோஜிற்கு இப்போது நடப்பது போன்று நிகழ்வு அவளுக்குமே புதிதாக இருந்தது. அவனின் திறமை மற்றும் செயல் திறன் பார்த்து தானே முதலில் பதவி உயர்வு தருவதாக சொன்னார்கள். சொன்ன சொல்லை தவற விடுவதை என்ன என்று சொல்வது?
அதும் மனோஜ் எந்த அளவிற்கு சின்சியர் சிகாமணி என்பது அவளுக்கு கல்யாணத்திற்கு முன்பிருந்தே தெரியும்!
பதவி உயர்வு கிடைத்திருக்கும் அமித் யார் என்பது மஞ்சுவிற்கும் தெரியும். எதனால் மனோஜ் இவ்வளவு உடைந்துப் போயிருக்கிறான் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அமித் பொதுவாக ‘ஜிங்-ஜாங்’ போட்டு முன்னேற நினைப்பவன்.
மனோஜ் தன் திறமையை, தன் உழைப்பை நம்பி இருப்பவன்!
இது போன்ற சம நிலை இல்லாத மோதல்கள் பெர்பெக்ட் உலகத்தில் வேண்டுமென்றால் நடக்காமல் இருக்கலாம். நிஜ உலகில் அன்றாடம் ஆங்காங்கே நடப்பது தான் என்றும் அவளுக்கு தோன்றியது...
அதனால் கணவனை சமாதானப் படுத்த முயன்றாள்.
“விடுங்க மனோஜ்... இது என்ன வெறும் ஒரு டெசிக்னேஷன் அவ்வளவு தானே? அடுத்த அப்ரைசல்ல உங்களுக்கு தானா ப்ரோமோஷன் கிடைச்சிடும். அமித் பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன? அவன் எப்படி வாங்கி இருப்பான்னும் ஈஸியா கெஸ் செய்ய செய்யலாமே.”
மனோஜ் மனைவியின் அணைப்பில் இருந்து இம்மியளவும் விலகாமலே பேசினான்.