தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 05 - யாஷ்
ஆதித்யா அக்ஷ்ராவுடன் கை குலுக்கினான். ஆனால் தொடர்ந்து என்ன சொல்வது என்று சில வினாடிகள் தடுமாறினான். பிறகு அக்ஷராவின் நண்பர்கள் சென்ற பக்கம் பார்த்தான்.
“உங்க பிரென்ட்ஸ் எல்லோரும் உங்க கிட்ட ஹார்ஷா பேசிட்டு இருந்ததா தோணிச்சு. அதுக்காக பேசினேன். எல்லோரும் உங்களை இப்போ விட்டுட்டு போயிட்டாங்களே?”
“அவங்க என் பிரென்ட்ஸ் கிடையாது. பிரெண்ட்ஸா மாத்த நாம முயற்சி செய்றோம்.”
அவளுடைய தட்டு தடுமாறும், உடைந்த தமிழ் பேச்சு அவனுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
“எனக்குப் புரியலையே?” என்றான்.
“நாம எல்லோரும் ஒரே காலேஜ்ல படிக்குறோம். அவங்க யாரும் என்னோட சரியா பேச மாட்டாங்க. நான் பேச வைக்க முயற்சி செய்றேன்.”
“இப்போ நீங்க சொல்றது புரியுது, ஆனால் எதனாலன்னு புரியலை. எதுக்கு உங்க கிட்ட பேச மாட்டேங்குறாங்க? உங்களுக்கு வசதியா இருக்கும்னா, நீங்க இங்கிலீஷ்லேயே சொல்லலாம்.”
அக்ஷரா அவனை நன்றியோடு பார்த்து விட்டு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தாள்.
“என் அப்பா பெரிய ரியல் எஸ்டேட் டெவெலபர். நிறைய பணம் சேர்த்து வச்சிருக்கார். எல்லா இடத்திலேயும் அவருக்கு இன்ப்ளூயன்ஸ் இருக்கு. நான் அவரோட உதவி இல்லாம நார்மல் வாழ்க்கை வாழ விரும்புறேன் ஆனால் எல்லோருமே நான் எது செஞ்சாலும் அது என் அப்பா வழியா கிடைச்சதா நினைக்குறாங்க. இந்த ஈவன்ட் வரதுக்கு எங்க காலேஜ்ல தனியா செலக்ஷன் ப்ராசஸ் இருந்தது. அதுல எனக்கு சான்ஸ் கிடைக்கலை. நான் தனியா ப்ரைவேட்டா ரெஜிஸ்டர் செய்து வந்தேன். எங்க காலேஜ்ல இவங்களைப் போல நல்லா கோட் செய்றவன் இன்னொருத்தன் இருக்கான். அவனை என்னவோ ரீசனுக்காக காலேஜ் மேனேஜ்மென்ட் அனுப்ப ஒத்துக்கலை. அதுக்கு காரணம் நான் தான், அவன் இடத்துல தான் நான் வந்துட்டேன்னு எல்லோரும் கோபமா இருக்காங்க.”