தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 31 - பிந்து வினோத்
பழைய சிந்தனைகளின் தாக்கத்தினால் சூடாக இருந்த குக்கரில் கவனிக்காமல் கை வைத்த மஞ்சு, அது விரல்களை சுட்டு விடவும் சிந்தனையில் இருந்து வெளி வந்து விரல்களை தடவிக் கொண்டாள்.
அவளுக்கும் மனோஜிற்கும் திருமணம் நடந்தப் பின் மனதில் நினைவு வைத்துக் கொள்ளக் கூடியதாக பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
மீண்டும் நினைக்க கூடாததாகவும் சில நிகழ்வுகள் இருக்கின்றன.
அப்படி நினைக்கவே கூடாது என்று மஞ்சு வைத்திருக்கும் பட்டியலில் முதலில் இருப்பது தான் இப்போது அவளின் சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்த காட்சி.
பதினொன்று, பன்னிரண்டு ஆண்டுகள் ஓடி இருந்தாலும்... இப்போதும் அந்த நினைவுகள் அவளுக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியது...
அந்த நாட்களில், வேலையில் ஏற்பட்டிருந்த மாற்றங்களால் மனோஜின் நடவடிக்கைகளில் பல விதமான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. மஞ்சு பெண்ணியம் பேசுபவள் இல்லை, ஆனால் அவளின் தலைமுறைக்கே உரிய விதத்தில் தன் கணவன் தனக்கான உரிமையையும், மரியாதையையும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். மனோஜும் அது வரை அப்படி தான் நடந்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் தன் ஏமாற்றங்களை - அதனால் ஏற்படும் விரக்தி மற்றும் கோபத்தை, மனோஜ் அவளிடம் வெளிப்படுத்தவும், மஞ்சுவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை! அதுவும் மனோஜ் அவள் பேசுவதை காதுக் கொடுத்து கேட்காமல் கூட இருக்கவும் அவளுக்கு திருமண வாழ்வின் மீது வெறுப்பே கூட ஏற்பட்டது!
திருமணம் என்ற ஒன்று நடந்தப் பிறகு எத்தனை பிரச்சனைகள், எத்தனை பேரிடம் அவள் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள வேண்டி இருந்தது, விட்டுக் கொடுக்க வேண்டி இருந்தது??? அதெல்லாம் போதாதென்று இப்போது மனோஜ் கோபத்தை காட்ட பயன்படுத்தும் “டம்மி” பொருளாக மாற அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை!