"எப்படி?"
"ஜாகிங் போகும் போது யாராவது கம்பெனி ஐடி கார்டை வேலை மெனக்கெட்டு எடுத்துட்டு போவாங்களா? மனைவி கதவை திறக்கலைன்னு பதற்றமே படாமல் காரை எடுத்துட்டு ஆபிஸ்க்கு போய் சாவி எடுத்துட்டு வந்தேன்ன்னு சொன்ன போதே சந்தேகம் வந்தாச்சு."
"ஓ!"
"கொலை செய்துட்டு, ஜாகிங் போயிட்டு, சும்மா இந்திரா நம்பருக்கு கால் செய்துட்டு, நேரா அப்பா கிட்ட போய் உண்மையை சொல்லி அழுதிருக்கான்... வீட்டில எடுத்த நகை, பணம் எல்லாத்தையும் அப்பா கிட்ட கொடுத்திருக்கான்... அதுக்கு அப்புறம் ஆபிஸ் போய் சாவி எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டு..."
"ம்ம்ம்... எனக்கு ஒன்னும் இவன் பாவம்னு தோணலை... ஒரு உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இந்திராவை அவனுக்கு பிடிக்கலைனா பிரிஞ்சிருந்திருக்கனும், அதை விட்டுட்டு ப்ளான் செஞ்சு கொலை செய்திருக்கான். ஜெயில் தான் அவனுக்கு சரியான இடம்!"
தேன் பதில் ஒன்றும் சொல்லாமல் தன் கையில் இருந்த இந்திரா என்று பெயரிட்ட அந்த பைலை மூடி வைத்தான்.
அவனுடைய வேலை முடிந்து விட்டது!
ஆனாலும் மனிதனாக அவனின் மனம் கனத்தது!
சத்யா சொல்வதுப் போல இந்திராவின் மரணத்தில் நியாயம் இல்லை! ஆனாலும் தேனால் முத்துக்குமார் மீதும் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை! அவனும் பாவம் தான்! பாசமான மகனாகவும் அண்ணனாகவும் இருந்ததால் தான் அவனுக்கு இந்த நிலைமை!
பாகற்காயை கடித்து விட்டதுப் போன்ற கசப்பு உணர்வு உருவானது!