தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 34 - பிந்து வினோத்
“சாரி மஞ்சு, நானே உனக்கு போன் செய்து பேசனும்னு இருந்தேன். சரி, எல்லா ப்ரோசீஜரும் முடிஞ்சதும் பேசலாம்னு விட்டுட்டேன்!” என்று அமுதா அழைப்பை ஏற்றதுமே பேசிக் கொண்டே போக, மஞ்சு குற்ற உணர்வுடன் அமைதியாக இருந்தாள் அவளே மிகவும் சிரமப்பட்டு தான் அமுதாவின் நம்பரை செல்போனில் தையல் செய்து இருந்தாள்.
இப்போதும் மனோஜிற்கு வேலை வேண்டாம் என்று அமுதாவிடம் சொல்ல அவளுக்கு தயக்கமாக தான் இருந்தது!
அமுதாவோ மறு பக்கம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள்.
“லீகல் டீம்ல இருந்து ரிப்ளை வந்ததும் நான் சொல்றேன். மனோஜை டாகுமென்ட்ஸ் அனுப்ப சொல்லு எல்லாம் முடிச்சிடலாம். அதுக்கு அப்புறம் சராவையும் மனோஜையும் நேரா பேச சொல்லலாம். அதோட நம்ம வேலை முடிஞ்சிடும்.”
ரொம்பவும் உற்சாகத்துடன் அமுதா சொல்லவும், அப்போதே சொல்லி விடுவது தான் சரி என்று முடிவு செய்து,
“அமுதா, சாரிப்பா... மனோஜால இந்த வேலைல ஜாயின் செய்ய முடியாது!” என்றாள் மஞ்சு மெல்லியக் குரலில்.
“என்னது?” என்ற அமுதாவின் குரலில் நம்பகமின்மை இருந்தது. தொடர்ந்து அவளே,
“என்ன சொன்ன மஞ்சு?” என்று மீண்டும் கேட்டாள்.
அமுதா அவளின் காதில் விழுந்ததை நம்பவில்லை என்பது மஞ்சுவிற்கு புரிந்தது!! திரும்ப சொல்ல அவளுக்கும் தயக்கமாக தான் இருந்தது, எனினும்,
“மனோஜால உங்க கம்பெனில இப்போ சேர முடியாது அம்மு...” என்று சொல்லி முடித்தாள்.
“ஏன்???” என்ற அமுதாவின் கேள்வியில் கோபம் கனன்றுக் கொண்டிருந்தது!