தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 11 - யாஷ்
“ஹோட்டல் சீசன்ஸ் போர்ல தங்கி இருந்தேன்னா சொல்ற?” நித்தின் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
ஆதித்யாவிற்கு அவரின் ஆச்சர்யத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் விளங்கவில்லை. விவேக்கிற்கு புரிந்தது.
“அவங்களுக்கு அந்த ஹோட்டல் ரேட் பத்தி தெரியலை அப்பா! காம்படிஷன் நடக்குற இடத்துல புக் செய்தா வசதியா இருக்கும்னு மட்டும் யோசிச்சிருப்பாங்க,” என விவேக் விளக்கம் கொடுத்தான்.
“ஆமாம், அப்படி தான். நான் வேற இடத்துல புக் செய்லாம்னு சொன்னேன். என் அக்கா கேட்கலை. புது ஊரு, தனியா வரேன், பக்கத்துல இருக்குன்னு நினைச்சு புக் செய்ற ஹோட்டல் தூரமா இருந்தா கஷ்டம்ன்னு, அதே ஹோட்டல்ல புக் செய்துக் கொடுத்தா,” என ஆதித்யா இப்போது விஷயம் புரிந்துக் கொண்டவனாக கூடுதல் விளக்கம் கொடுத்தான்.
புரிந்துக் கொண்டவராக தலை அசைத்தார் நித்தின்,
“இருந்தாலும், சீசன்ஸ் போர் ரேட்ஸ் ரொம்பவும் அதிகம் ஆச்சே!”
“காம்படிஷன்ல பங்கெடுத்துக்குறரவங்களுக்கு டிஸ்கவுன்ட் கொடுத்திருந்தாங்க.’
“அப்போ கூட அதிகமா தான் இருக்கும் ஆதித்யா. நியூயார்க் சிட்டில இருக்க டூ ஸ்டார், த்ரீ ஸ்டார் ஹோட்டலுங்க ரேட்டே ரொம்ப அதிகம். இது பைவ் ஸ்டார் ஹோட்டல் வேற! விலையை பத்தி சொல்லனுமா என்ன!” என விவேக் சொல்லவும்,
“அவ்வளவு அதிகமா இருந்தாலும் தம்பி கஷ்டப் பட்டுடக் கூடாதுன்னு அவன் அக்கா, புக் செய்துக் கொடுத்திருக்கா. இந்த மாதிரி அன்பை, பாசத்தை எல்லாம் நம்ம ஊருல தான் பார்க்க முடியுது. அதும் சான்வி தம்பிக்காக எதையும் செய்வா போல இருக்கு!” என ஹரிணி தன் பங்கிற்கு சொன்னாள்.