தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 39 - பிந்து வினோத்
அந்த வாரத்தின் நாட்கள் வேகமாகவே ஓடிப் போனது. பல நாட்களுக்குப் பிறகு மனோஜின் வாழ்க்கை எந்த பெரிய “டிராமா”வும் இல்லாது இயல்பாக சென்றது.
ஆர்வம் காரணமாக புது வேலையில் அதிக ஈடுபாடுடன் செயல் பட்டான் மனோஜ். ஒரு சில நாட்களிலேயே அந்த கம்பெனியின் மொத்த சரித்திரத்தை கரைத்து குடித்து விட முயன்றான்! அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றான். அது மட்டும் அல்லாது அந்தக் கிளையில் வேலை செய்பவர்களிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு அவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் அறிந்துக் கொள்ள முயன்றான்.
அலுவலகத்தில் இப்படி என்றால், வீட்டில் அனைத்துமே பழைய நிலைக்கு சென்றிருந்தது!
அவன் வீட்டை அடைந்ததுமே முகம் மலர அவனை வரவேற்க மஞ்சு இருந்தாள்...! அதுவே அவனுக்கு முழு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
முன்பு போல மாலை நேர மீட்டிங், வேலை என்று இல்லாதததால் மனோஜ் மஞ்சு பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பான்... அவள் சமைக்கும் போதும் அவளுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டு அவள் அருகே உரசியப் படி நிற்பான். மஞ்சுவும் இந்த நேரங்களை விரும்ப தான் செய்தாள்...
அவர்கள் நடுவே நடந்த ‘கச்சா முச்சா’க்களுக்கு ஈடுக்கொடுப்பது போல மனோஜ் அவளுடன் அதிக நேரம் செலவிட்டு, அன்பையும் வெளிப்படுத்த... அவனுக்காக மனதுள் ஏங்கி இருந்த மஞ்சுவும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டாள்...
இதனால் மாலை நேரங்களும் இரவு நேரங்களும் அவர்கள் இருவருக்குமே மனதிற்கு இதத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதாக சென்றது...
புதுமண தம்பதிகள் போல இருவரும் அவர்கள் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காமல் நேரத்தை செலவிட அனைத்துமே இனிமையாக சென்றது!
வார நாட்கள் முடிந்து வெள்ளிக் கிழமையும் வந்து சேர்ந்தது!