ஹரிணி ஒரு தட்டில் குழிப்பணியாரமும், சின்ன சாசரில் சட்னியும் வைத்து அவனிடம் கொடுத்தாள்.
“எப்போவும் செய்றது மாதிரியே தானே இருக்கு?” சந்தேகத்துடன் கேட்டான் விவேக்.
“பார்க்க ஒரே மாதிரி இருக்கும். டேஸ்ட் செய்து எப்படி இருக்குன்னு சொல்லு.”
விவேக் வேறு வழி இல்லை என்பதை உணர்ந்ததால் ஸ்பூனில் சிறிய துண்டை எடுத்து சட்னியுடன் வாயில் வைத்தான்.
ஜிவ்வென்று உச்சி வரை காரம் ஏறியது!
“ஹப்பா, என்ன காரம்!”
“நான் சொன்னேனா இது வேற மாதிரி இருக்கும்னு! இதுக்கு பேரு மசாலா குழிப்பணியாரம்.”
விவேக்கிற்கு எப்போதுமே காரமான உணவு வகைகள் மிகவும் பிடிக்கும்.
“நல்லா இருக்கும்மா! காரமா சாப்பிட்டா தான் சாப்பிடுற மாதிரி இருக்கு. இதுக்காக தான் நான் பர்கர், பிட்சான்னு சாப்பிடுறது கிடையாது. எல்லாமே சப்புன்னு இருக்கு.”
“நம்ம பாரம்பரிய சமையல்ல எல்லா சுவையும் கலந்து வச்சிருக்கோம். அதனால எல்லோருக்கும் பிடிக்குது.” ஹரிணி பெருமையுடன் சொன்னாள்.
“இந்த விடியோ பார்த்து தான் செஞ்சேன்.” ஹரிணி உணவு மேஜை மேலே போனை வைத்துக் காட்டியதை பெயருக்கு பார்த்து விட்டு, குழிப்பணியாரத்தை சுவைப்பதை தொடர்ந்தான் விவேக்.
அப்போது காற்றில் எதுவோ அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது.