“பேஸ்மென்ட் கதவை மூட மறந்துட்டேன்னு நினைக்கிறேன். நான் பார்த்துட்டு வரேன். நீ சாப்பிடு.” ஹரிணி மகனிடம் சொல்லி விட்டு சென்றாள்.
பணியாரம் சுவையாக இருந்ததால் விவேக் அதில் கவனத்தை தொடர்ந்தான்.மனதுக்குள் வேலை பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து போய் கொண்டிருந்தது.
திடீரென்று ஹரிணியின் மொபைலில் அழைப்பு வந்து அவனை கலைத்தது.
சுவாரசியம் இல்லாமல் பார்த்தவன், அழைப்பவர் பெயர் சான்வி என்பதை பார்த்ததும் துள்ளிக் குதித்து போனை கையில் எடுத்துக் கொண்டான். திரும்பிப் பார்த்தால் ஹரிணி கண்ணில் படும் இடத்தில இல்லை.
போனை எடுத்துக் கொண்டு தோட்டம் பக்கமாக சென்று அழைப்பை ஏற்றான்.
சான்வியின் உருவம் மங்கலாக தெரிந்தது. ஆனால் அவளுக்கு காலை நேரம் என்பதால் அந்த மங்கிய வடிவிலும் கூட பளிச்சென்று இருந்தாள்.
மாலை நேரம், வேலையின் அயர்வு என சோர்ந்துப் போயிருந்த விவேக்கிற்கு சான்வியை பார்த்ததே புது புத்துணர்வைக் கொடுத்தது.
ஹரிணியை எதிர்பார்த்திருந்த சான்வி, விவேக் விடியோவில் வரவும் தயக்கத்துடன் “ஹலோ” என்றாள்.
“அம்மா எக்ஸ்பெக்ட் செய்தீங்களா? சாரி சான்வி. நான் போனை கையில வச்சிருந்தேன். என்னன்னு சொல்லுங்க, நான் அம்மா கிட்ட பேச சொல்றேன்.”
“இன்னைக்கு காம்படிஷன் பர்ஸ்ட் ரவுன்ட். ஆதியை காண்டாக்ட் செய்ய முடியலை. அக்ஷராவும் ஆன்லைன்ல இல்லை. ஆண்ட்டிக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்க கூப்பிட்டேன்.”
“இவ்வளவு தானா? நானே கேட்டுச் சொல்றேன்.”