காரை பார்க்கிங்கில் நிறுத்தியப் பிறகும், உடனே இறங்காமல் மீண்டும் ஒருத்தடவை மஞ்சுவை போனில் அழைத்துப் பார்த்தான்... ஹுஹும் அவள் இப்போதும் போனை எடுக்கவில்லை...
அப்படி என்ன செய்கிறாள், என்று கோபம் வரவில்லை... மாறாக, என்ன செய்கிறாள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தான் இருந்தது...!
மனோஜ் காரை நிறுத்திய இடத்திற்கு பக்கத்திலேயே சரவணனும் காரை நிறுத்தி இருந்தான்...
மனோஜ் காரில் இருந்து வெளியே வருவதற்கு முன்பே சரவணனும், அமுதாவும் காரில் இருந்து இறங்கி நின்றிருந்தார்கள்...
“சாரி, மஞ்சுவை கூப்பிட்டு நீங்களும் வரதை சொல்லலாம்னு பார்க்கிறேன்.. அவ போன் எடுக்கவே மாட்டேங்குறா... எதோ வேலையா இருக்கா போலருக்கு... நீங்க வாங்க...” என விபரம் சொல்லிக் கொண்டே அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தான் மனோஜ்.
“உனக்கு இன்னைக்கு மஞ்சு கிட்ட நல்லா டோஸ் விழப் போகுது...” என்று அமுதாவை பார்த்து கிண்டலாக சொல்லிக் கொண்டே, சரவணன் மனோஜுடன் இணைத்து நடந்தான்...
“ச்சேச்சே அப்படி எல்லாம் இல்லை...” என்று மனோஜ் சமாதானப்படுத்த முயன்றான்...
அதற்கு அவசியமே இல்லை என்ற விதத்தில், அமுதா சரவணன் சொன்னதைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை...!
மனோஜ் அழைப்பு மணியை அழுத்திய சில நொடிகளிலேயே கதவு திறந்தது. சமையலறையில் இருந்ததன் அறிகுறியாக நெற்றியில் வியர்வைத் துளிகளும், கையில் கரண்டியுமாக கதவை திறக்க வந்திருந்தாள் மஞ்சு.
“எத்தனை தடவை கால் செய்தேன், P... மஞ்சு?”