சுருக்கமாக விவேக் அனைத்தையும் சொல்லி முடித்தப் போது, சிதம்பரத்தின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் தோன்றி இருந்தன. ஆனால், அவன் எதிர்பார்த்த கோபம் இருக்கவில்லை. சில வினாடிகள் அமைதிக்கு பின்,
"விவேக், உங்க தங்கச்சியை வேற செக்ஷனுக்கு மாத்திடவா?" என்றார் சிதம்பரம்.
"என்ன சார் நீங்க... அந்த லெக்சரர மாத்த சொன்னால் என் தங்கச்சியை மாத்துறேன்னு சொல்றீங்க...?"
"இல்லை விவேக் நீங்களே யோசிச்சுப் பாருங்க... இப்போ இதுக்காக நான் பாரதியை மாத்தினால் நாளைக்கு எந்த லெக்சரரும் பசங்களை கேள்வியே கேட்க முடியாது... நான் பாரதி கிட்ட பேசுறேன். இனிமேல் இதுப் போல் பேரெண்ட்ஸ் வந்தால் கொஞ்சம் பொறுமையா பேச சொல்றேன்...."
விவேக் பதில் சொல்லாது அமைதியாக இருந்தான்.
"உங்க கோபம் எனக்கு புரியுது மிஸ்டர் விவேக்... ஆனால் பாரதி ஒரு நல்ல லெக்சரர்... இந்த அஞ்சு வருஷத்தில அவங்க எடுத்த எல்லா சப்ஜெக்டிலும் 100% ரிசல்ட் வந்திருக்கு... அது மட்டும் இல்லாமல், ஸ்டுடென்ட்ஸுக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு டீச்சர் அவங்க.... ஆனால் உங்க கிட்ட அப்படி பேசினது தப்பு தான், நான் பாரதியை கூப்பிட்டு கண்டிக்கிறேன்..."
"சரி... தேங்க்ஸ் சார்...” என்று கோபத்துடன் எழுந்து சென்றான் விவேக்.
***********
மதியம் மூன்றாம் வருட வகுப்பிற்கு பாடம் நடத்தி விட்டு வந்த பாரதி, வழியில் மதுமதி நிற்பதைக் கண்டாள். சிரிக்கலாமா, வேண்டாமா என்று தயங்கிய படி மது நிற்பது புரியவும், எப்போதும் போல இயல்பாக அவளைப் பார்த்து புன்னகைப் புரிந்தாள். பாரதியின் புன்னகையை பார்த்த உடன் மதுமதியின் முகம் சற்று தெளிந்தது.