தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 17 - யாஷ்
“அம்மா, உங்க போனைக் கொடுங்க!’ பெயருக்கு கேட்டு விட்டு ஹரிணியின் போனை அவனே கையில் எடுத்துக் கொண்டான் விவேக்.
ஹரிணி, “எதுக்கு விவேக்?” என்று கேட்டதற்கு பதில் சொல்லாது ஹரிணியின் வாட்ஸ்அப் செக் செய்தான் விவேக்.
“நீங்க சான்வி கிட்ட என்ன சொன்னீங்க?” விவேக்கின் கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை என்ற அர்த்தத்தில் உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கினாள் ஹரிணி.
“கதை சொல்லாதீங்க. நான் பேசினதுக்கு அப்புறம் நீங்க ஒரே தடவை அவக் கிட்ட பேசி இருக்கீங்க??”
“ஆமாம், அன்னைக்கு நீ பேசினதுக்கு பிறகு, எனக்கு போன் போட்டீயா சான்வின்னு கேட்க ஒருத்தடவை அவளைக் கூப்பிட்டேன்.”
“அப்போ என்ன சொன்னீங்க?”
“ஒன்னுமே உன்னைப் பத்தி நான் சொல்லலை. சான்வி எதுக்கு போன் செய்தான்னு சொன்னா. அவ்வளவு தான்! இப்போ உனக்கு என்ன பிரச்சனை, அதை சொல்லு!”
“நான் போன் செய்தா அவ எடுக்கவே மாட்டேங்குறா!”
“இதுல என்ன அதிசயம்? இரண்டு தடவை பேசிட்டு ஏய் நீ அழகா இருக்கேன்னு சொல்றவனை யாரு ப்ளாக் செய்யாம இருப்பா?”
“இதெல்லாம் ஓவரா இருக்கும்மா. அழகா இருக்கேன்னு சொன்னா பேச கூடாதா?”
“சொன்னது மட்டும் கணக்கு கிடையாது விவேக், சொன்ன விதமும் இருக்கு! நீ பேசினதைப் பார்த்து நானே உன்னை விசாரிச்சேன் ஞாபகம் இருக்கா? சான்வி சின்னப் பொண்ணு, புத்திசாலியாவும் தெரியுறா, அவளும் கவனிச்சிருப்பா!”