தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 47 - பிந்து வினோத்
மஞ்சுவிற்கு விழிப்பு வந்த உடனேயே, கண்களை முழுவதும் திறக்காமல் பக்கத்தில் மனோஜை தேடினாள். அங்கே யாருமில்லாமல் காலியாக இருக்கவும், கண்களை திறந்துப் பார்த்தாள். அவளருகே மனோஜ் இல்லை...
வெளிச்சமாக இருக்கவும் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சோம்பலுடன் எழுந்துக் கொண்டாள் மஞ்சு!
மனோஜ் அவளை தொல்லை செய்யாது இருக்க வேறு எங்கோ அமர்ந்து லாப்டாப்பில் வேலை செய்துக் கொண்டிருப்பான் என்று ஊகித்தாள்.
இப்போதெல்லாம் தாமதமாக எழுந்துக் கொள்வதும், சீக்கிரமாக தூங்க செல்வதும் மஞ்சுவின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்தது...
பரிவுடன் மேடிட்ட வயிற்றை மெல்லத் தடவினாள்...
“உன்னால எனக்கு கிடைச்சிருக்க ப்ரிவிலேஜஸ் பார்த்தீயா...” என குழந்தையுடன் மானசீகமாக பேசியவள், மனமே இல்லாது எழுந்துக் கொண்டாள்.
குளித்து, உடை மாற்றி தங்கி இருந்த அறையில் இருந்து வெளி வந்தவள் கண்களால் மனோஜை தேடிக் கொண்டே சென்றாள். அவனை எங்கேயும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
அமுதா தான் ஒரு அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டே போனில் பேசிக் கொண்டிருந்தாள்...
அமுதாவை தொந்தரவு செய்து மனோஜ் பற்றி கேட்கலாமா அல்லது அவளே தேடலாமா என்று மஞ்சு அவசரமாக மனசுக்குள் பட்டிமன்றம் நடத்த, அமுதா தோழி நிற்பதைக் கவனித்தாள்.
அடுத்த வினாடி, போனில், “ஐ வில் கால் யூ இன் அ ஃபியூ மினிட்ஸ்!” என சொல்லி அவசரமாக அழைப்பை துண்டித்தாள்.