தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 20 - யாஷ்
கன்னத்தில் கையை வைத்து தம்பி சொன்ன அனைத்தையும் கவனமாக கேட்டிருந்த சான்வி, அவன் சொல்லி முடித்ததும் நிமிர்ந்து அமர்ந்தாள். எனினும் எதுவும் சொல்லவில்லை.
சான்வியின் அமைதி ஆதித்யாவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
“நான் செஞ்சது தப்புன்னு நீயும் நினைக்குறீயா சான்வி? டீம்னா சேர்ந்து தான எல்லாம் செய்யனும்? நாங்க பேசி ஒரு ப்ராஜக்ட் சம்பிட் செய்றதுன்னு முடிவு செய்தோம். அக்ஷரா மட்டுமா யோசிச்சு அதை மாத்தினா எப்படி? என்னால ஏத்துக்க முடியலை. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்.”
சான்வி மீண்டும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டாள் ஆனால் எதுவும் சொல்லவில்லை.
“சாரி சான்வி. நீ எனக்காக எவ்வளவு செஞ்ச. நான் உன்னை ஏமாத்திட்டேன். என்னோட ஆசை எல்லாம் அதிகப்படின்னு எனக்கு இப்போ தோணுது. உனக்காக இருந்த பணம் செலவானது மட்டுமே மிச்சம். நானும் ஒரு வேலை தேடிக்குறேன் சான்வி. என் சம்பள பணத்தை சேமிக்கலாம்.”
சான்வி இப்போது கன்னத்தில் இருந்து கையை எடுத்துக் கொண்டாள்.
“நீ செஞ்சது சரின்னு உனக்கு தோணுதா ஆதி?”
ஆதித்யா கையைப் பிசைந்தான்.
“அக்ஷரா தனியா முடிவெடுத்தது உனக்குப் பிடிக்கலைன்னு சொல்ற. அதுக்காக அவ ஒன்னும் அவளோட ஐடியாவை மாத்தி சம்பிட் செய்யலையே. உன்னுடையதை தான் சம்பிட் செய்தா. அதும் நீ சம்பிட் செய்லாம்னு சொன்ன அவளோட ஐடியாவை எடுத்துட்டு உன்னுடையதை சம்பிட் செய்திருக்கா. அதுல என்ன சுயநலம் இருக்க முடியும்? உங்க டீம்க்கு இது பெட்டர் ப்ராஜக்ட்ன்னு அவ நினைச்சதா தானே சொன்னா? அதையே தானே செஞ்சிருக்கா?”
“அவளா எப்படி சான்வி முடிவு செய்யலாம்?”