“வாழ்க்கையில ஜெயிக்குறது சுலபம் கிடையாது ஆதி. திறமை வேணும், சாமர்த்தியம் வேணும், எது சரி எது தப்புன்னு யோசிக்குற அறிவு வேணும். எல்லாத்தையும் விட பொறுமையும் வேணும். நீ ஒரு தொழிலதிபர் ஆனப் பிறகு உன் தொழில்ல ஒரு பிரச்சனை, ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ன்னு வந்தா என்ன செய்வ, எனக்கு எதுவும் வேண்டாம்னு அப்படியே நடுல எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிருவீயா?”
“நான் தான் தொழிலதிபர் ஆகப் போறதில்லையே!” மிகவும் மெதுவாக முனகினான் ஆதித்யா.
“என்னைக் கேட்டா, நீ முதல்ல அக்ஷரா கிட்ட மன்னிப்பு கேளு. எதனால அப்படி நடந்துக்கிட்டேன்னு அவளுக்கு விளக்கமா சொல்லு.”
“அப்போ நான் செஞ்சது தப்புன்னு சொல்ற?”
“உன் கோபம் தப்பு இல்லை. அந்த கோபத்தை நீ காட்டின விதம் தப்பு. நீயே யோசிச்சுப் பாரு. அப்படி கான்டஸ்ட் நடுல வரலாமா?”
ஆதித்யா யோசித்துக் கொண்டு இருந்தான்.
“அக்ஷரா கிட்ட பேச மனசு வரலைன்னா, அட்லீஸ்ட் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பு. அவக் கொடுத்த சர்ப்ரைஸ் ஷாக்கா இருந்ததுன்னு சொல்லிடு.”
சான்வி மெசேஜ் அனுப்பினால் போதும் என்றது ஆதித்யாவிற்கு நிம்மதியைக் கொடுத்தது. அக்கா மனம் மாறும் முன் மெசேஜ் அனுப்பி வைக்க முடிவு செய்தான்.
செல்போனை எடுத்து மொபைல் டேட்டா ஆன் செய்தான். அதற்காக காத்திருந்ததுப் போல ஒரே நேரத்தில் பல மெசேஜ்கள் டவுன்லோட் ஆனது.
ஆதித்யா அதற்காக காத்துக் கொண்டு இருக்காமல் அக்ஷ்ராவின் நம்பருக்கு ‘சாரி அக்ஷரா. நான் பொறுமையா நடந்திருக்கலாம்’ என மெசேஜ் அனுப்பினான்.