ஹீனா சொன்ன தகவலை கேட்டதும் ஏஞ்சலின் முகம் அஷ்டக் கோணலாகியது. விபுல் அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். ஏஞ்சல் அவனின் பார்வையை கவனிக்காமல் மஞ்சள் அழகியாக தெரிந்த கல்யாணப் பெண்ணை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எங்கே அவள் தன்னை மஞ்சள் கையால் தொட்டு விடுவாளோ என்ற பயம் ஏஞ்சலின் கண்களில் தெரிந்தது.
ஆட்டம், பாட்டத்திற்கு நடுவே ஹீனா சொன்னதுப் போல கல்யாணப் பெண் தன் கைகளில் இருந்த மஞ்சளை கல்யாணம் ஆகாத தன் தோழிகள் மீது தடவினாள். நல்ல வேளையாக அவள் ஏஞ்சல் அருகே வரவில்லை. ஏஞ்சலும் அவள் பக்கமே போகவில்லை!
மஞ்சள் விழா முடிவுக்கு வந்ததும், ஏஞ்சல் நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினாள். அந்த வினாடியோடு மீண்டும் பழைய கல கல ஏஞ்சலாகவும் மாறிப் போனாள்.
அன்றைய நிகழ்ச்சி முடிந்து விபுலுடன் ஒன்றாக நடந்தப் போது ஏஞ்சலுக்கு சிரித்து சிரித்து கதைப் பேசியதில் வாய் வலித்துக் கொண்டிருந்தது.
“ஐ ஹாட் அ குட் டைம் விபுல்!” என்றாள்.
விபுல் தலையை ஆட்டினான்.
“எதுக்கு டல்லா இருக்க விபுல்? நம்ம மவுன்டேயின் ட்ரிப்க்கு நீ ரெடி தானே? எல்லாம் பேக் செய்துட்டீயா?”
விபுல் ஏஞ்சலை வித்தியாசமாகப் பார்த்தான்.
“அந்த ட்ரிப் பத்தி எனக்கு யோசனை இருக்கு ஏஞ்சல். மவுன்டேயின்க்கு எப்போ வேணா போகலாம். அதுக்கு என்ன அவசரம்? இன்ஸ்டெட் என் பேரன்ட்ஸ் பார்க்கலாமா? உன்னை சந்திச்சா அவங்க சந்தோஷப் படுவாங்க.”