தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 24 - யாஷ்
சான்வி கடிகாரத்தைப் பார்ப்பதும் இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளி வரும் பாதையை பார்ப்பதுமாக இருந்தாள்.
அக்ஷரா வரும் விமானம் நான்கு மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் தரை இறங்கி விடும் என விவேக் மெசேஜ் அனுப்பி இருந்தான். அக்ஷரா இந்தியா வருவதைக் குறித்து விவேக் மெசேஜ் அனுப்பிய நேரம் முதலே நான்கு ஐந்து தடவைகள் சான்வி அவனுடன் வாட்ஸ்அப்பில் பேச முயற்சி செய்து விட்டாள். ஒவ்வொரு முறையும் ரிங் போனதே தவிர விவேக் பேசவில்லை.
அவன் பிசியாக இருப்பான் என நினைத்துக் கொண்டாள். இருந்தாலும் பேச முடியவில்லை என்று ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாம் என்றும் அவளுக்கு தோன்றியது.
அக்ஷரா வந்ததும் திரும்பவும் அவனுடன் வாட்ஸ்அப்பில் பேச வேண்டும் என்று சான்வி நினைத்துக் கொண்டாள்.
ஆதித்யாவும் அக்ஷராவை வரவேற்க வந்திருந்தான். அக்ஷரா அவன் சென்னை வந்தப் பிறகு ஒரு மெசேஜ் கூட அனுப்பவில்லை. அவள் சென்னை வருவதுக் கூட சான்வி வழியாக தான் அவனுக்கு தெரிந்தது. அக்ஷரா இப்போதும் அவன் மேல் கோபமாக இருப்பதை அவனால் உணர முடிந்தது.
அதற்கு அவளை குற்றம் சொல்ல முடியாது. அவன் மேல் தான் தப்பு. எனினும் அக்ஷரா பிடிவாதம் பிடிக்காது அவனை திட்டி தீர்த்து பிறகு மன்னிக்கவும் செய்து விட்டால் சரியாக இருக்கும்.
அவள் அவனோடு பேசுவாளா என்றே தெரியவில்லையே.
சமீபத்தில் தரை இறங்கிய விமானத்தில் இருந்து பலரும் வெளி வந்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நடுவே தெரிந்த அக்ஷ்ராவை ஆதித்யா உடனே கண்டுக் கொண்டான்.
"சான்வி, அக்ஷரா வரா. அதோ ப்ளூ ஜீன்ஸ், எல்லோ டாப்ஸ் போட்ருக்கா பாரு."