“ஏன் காலியா இருக்கு?”
“அந்த வீட்டோட சொந்தக்காரங்க காணாம போயிட்டாங்க. ஒரு வயசான அம்மா அந்த வீட்டை பராமறிக்குறாங்க. அவங்களுக்கு வயசாயிடுச்சு, முழு வீடையும் கவனிக்க முடியலைன்னு போன வாரம் பார்த்தப்போ என் கிட்ட புலம்பினாங்க. அப்போவே நான் பாதி வீடை வாடகைக்கு விடுங்கன்னு சொன்னேன். நான் கேட்டா தட்டாம தருவாங்க.”
சக்தி யோசித்தாள்.
“யோசிக்காதீங்க சக்தி. உங்களுக்கு நான் சரியா தான் சொல்வேன். வாங்க, என் கூட வந்து வீட்டைப் பாருங்க. பிடிக்கலைனா வேற யோசிக்கலாம்.”
அரை மனதுடன் ஜீப்பில் இருந்து இறங்கிய சக்தி, தென்றல்வாணன் வீட்டு வாசலில் நிற்பதை கவனித்தாள்.
“உங்க ஹஸ்பன்ட் கோபப் பட போறார்.”
“போலீஸ்ங்குறதால அவர் முகம் அப்படி இருக்கும். மத்தபடி, உங்களை இப்படி அனுப்பிட்டு அப்புறமா வருத்தப்படுவார். நீங்க அதெல்லாம் யோசிக்காதீங்க,” என்று சக்தியிடம் சொல்லி விட்டு,
“என்னங்க, பாவம்ங்க இவங்க. இதுக்கு மேல தனியா எங்கே போய் வீடு தேடுவாங்க? நம்ம வீடு தானே வேண்டாம், நான் பர்வதம் பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். பத்து நிமிஷத்துல வந்திடுறேன்,” என்று கணவனிடம் சொன்னாள் சத்யா.
தென்றல்வாணனின் முகத்தில் திருப்தியின் சாயல் வந்தது.
“தப்பா எடுத்துக்காதீங்க சக்தி” என்றான் விளக்கம் கொடுப்பதைப் போல
“நம்ம டிபார்ட்மென்ட் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஃப்ரீயா விட்ருங்க தென்றல்வாணன்,”