ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்லை;
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
ஒட்டுமொத்த வலியையும் இத்தனை நாள் அனுபவித்த வேதனையையும் தனது பாட்டில் வெளிப்படுத்தியபடி அற்புதமாக தெரிவித்தாள் பரத நாட்டியத்தில்… சாகரிகா….
ஷன்வியின் கண்களோ நம்ப முடியாமல் இமைக்க மறந்தது… அவள் மனம் திரும்ப திரும்ப யோசித்ததில் ஒரு உண்மை அவளுக்கு புலப்பட்டது… அது… ரிகா ஒருவரை காதலித்திருக்கிறாள்…. எனில்… அவரையே திருமணம் செய்து கொள்ளலாமே… யாரென்று சொல்லாமல் ஏன் இந்த பாட்டைப் பாடுகிறாள்… எதற்காக இந்த நாட்டியம்…. அதுவும் பாரதியாரின் ஆசை முகம்?...
“சரிம்மா… நாங்க கிளம்புகிறோம்… சீக்கிரம் நிச்சயம் பண்ணிடலாம்… வீட்டில் கொலு வைத்திருக்கிறோம்…. அவசியம் நீங்க எல்லோரும் வரணும்…” என்றபடி சென்றார் கோதை…
வீட்டிற்கு வந்ததும் அவ்னீஷ், ஷன்வி ரிகாவிடம் திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லியதை தெரியப்படுத்தினான் அவனது மூன்று தமையன்களிடமும்….
“ஹரீஷ் என்னாச்சு… சாகரிகாவிற்கு?... பிறகு சொல்கிறேனென்று சொல்லாதே…. பார்த்தாய் தானே அவள் ஆடினதை… கொடுமைடா… இது… எனக்கு அழுகையே வந்துட்டுடா,,,, என்னால தாங்க முடியலைடா… என்னாச்சு சொல்லுடா… ப்ளீஸ்…. மயூரி கூட இவ இருந்த வரைக்கும் அண்ணா அண்ணா என்று சொல்லிட்டே இருப்பாடா… அவ தெரிஞ்சு சொன்னாலோ, இல்ல தெரியாமல் சொன்னாலோ… எனக்கு தெரியாது… அவ எனக்கு தங்கை போல தாண்டா… ப்ளீஸ் சொல்லு… அவ ஏன் இப்படி பிஹேவ் பண்ணுறா?... ஏன் என்னை தெரிஞ்சவனா அவ காட்டிக்கலை?... ஆதியையும் அவள் பார்த்திருக்கிறாள்…. ஆனால் அவனையும் தெரிந்து கொண்ட மாதிரி அவள் நடந்துகொள்ளவில்லை… ஆதி சொன்ன மாதிரி சில நேரங்கள் தான் அவர்கள் பேசியிருக்கிறார்கள் அதனால் கூட அவளுக்கு அவனை தெரியாமல் இருக்கலாம்… ஆனால் என்னை எப்படி தெரியாமல் போகும்?... எனக்கு புரியவில்லைடா… ஆதி நீயாச்சும் சொல்லுடா… அவனை சொல்ல சொல்லுடா…” என்று முகிலன் கெஞ்சினான்…
இது எதையும் கவனிக்கவே இல்லை ஆதி… அவன் அவனது உலகில் இருந்தான்…
“ஆதி…” என்று பலமாக கத்தினான் ஹரி…
திடுக்கிட்டு நிமிர்ந்தவனின் கண்களின் ஓரம் நீர்… அதைப் பார்த்த அனைவருக்கும் பேச நா எழவில்லை…
முதலில் சுதாரித்தது ஹரி தான்… “ஆதி இங்கே பார்… ஆதி… ஏன் இப்படி இருக்கிறாய்… எதாவது பேசு… ரிகாவின் நடனம் முகிலனை அழ வைத்தது போல் உன்னையும் அழ வைத்துவிட்டதா?...” என்று கேட்டதும்தான் தன் கண்களில் கண்ணீர் இருப்பதை அறிந்தான் ஆதி…
வேகமாக அதை தட்டிவிட்டவன், மௌனம் சாதித்தான் எதுவும் சொல்லாமல்…
முகிலனுக்கு தான் பொருக்கவில்லை… “நீ எல்லாம் மனிதனாடா?... அவளை அங்கு தெரியாது என்று சொல்லிவிட்டு, இப்போது அவள் நடனத்தைப் பார்த்து அழுகிறாயா?...”
“………….”
“எப்போதிலிருந்து பொய் பேச கற்று கொண்டாய் ஆதி?...”
“………….”
“அத்தனை முறை அங்கு வைத்து கேட்டேனே…. தெரியாது என்று சாதித்தாயே… பின் ஏனடா இங்கு வந்து இப்படி கண்ணீர் கொள்கிறாய்?...”
“………….”
“ஓ மனிதன் என்கிற உணர்வா?... சக மனுஷி கஷ்டப்படுகிறாள் என்கிற பரிதாபமா?...”
“…………..”
“இந்த உணர்வு அவள் நடனம் பார்க்கும் வரைக்கும் உனக்கு புரியவில்லை இல்லையா?...”
“…………..”
“முகிலா போதும் விடு…”
“என்னால முடியலைடா ஹரி…. சரி நீ சொல்லுடா அவளுக்கு என்ன ஆச்சு?... அவளை உனக்கு எப்படி தெரியும்?... யார் மூலமாக தெரியும்?...”
“அவளை என் வாழ்வில் கொண்டு வந்தது அவ்னீஷ் தான்…”
“என்ன!!!!!!!!!!!!!!!!!!!!...” என்றனர் அவ்னீஷும், முகிலனும்…
“ஆமாடா… அவளை ஈஷ் தான் எனது மருத்துவமனையில் சேர்த்தான்…”
“அய்யோ ஹரீஷ் அண்ணா… இதை ஏன் நீங்க என்னிடம் சொல்லவில்லை?... நேற்று கூட கேட்டேனே… உங்களுக்கு அவங்களைப் பற்றி தெரியுமான்னு?... அப்போ கூட நீங்க சொல்லவில்லையே… ரத்தமாய் அவர்கள் முகம் இருந்ததில் எனக்கு அடையாளம் தெரியவில்லை… உங்களுக்கு தெரியும் தானே… நீங்கள் ஏன் அவர்களைப் பார்க்கவில்லை என்று கூறினீர்கள்?...”
“ஆமா ஈஷ்… அவளை சுயநினைவுடன் நான் பார்க்கவில்லையே… பிறகு எப்படி நான் சொல்ல.. நான் அவளைப் பார்த்தேனென்று?...”
“ஹரீஷ் என்ன சொல்லுற?...” என்று முகிலன் அவன் கைகளை இறுக்கினான்…
“முகிலா… அது…”
“சொல்லு தயங்காதே…”
“முகிலா…இது அவளின் வாழ்வு சம்மந்தப்பட்டது…”
“வீட்டில் அம்மா சொன்னதை கேட்டாய் தானே ஹரி…. ஆதிக்கு பார்த்த பெண் நினைவிருக்கிறதா? இல்லையா உனக்கு?...” என்று முகிலன் அதட்டினான்…
“இருக்கிறது… அதனால் தான் தயங்குகிறேன்…”
“ஏன்?...”
“ஆதி இன்னும் சம்மதம் சொல்லவில்லை… ரிகாவின் சம்மதத்தை முதலில் பெற்று வாருங்கள் என்று கூறினான் அல்லவா?...”
“ஆம்… அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?...”
“நிறைய இருக்கிறது…”
“என்ன அது?...”
“அவள் காதலித்திருக்கிறாள் ஒருவரை…”
“அதுதான் அவளின் பாட்டில் உறுதியாகி விட்டதே… இதை நீ வேறு ஏண்டா தனியாக சொல்கிறாய்?...”
“தெரிகிறது அல்லவா?... பிறகு ஆதியிடம் அவளைப்பற்றி ஏன் சொல்லணும்?...”