07. இரு கண்ணிலும் உன் ஞாபகம் - வத்ஸலா
ஒரு வினாடி அவள் இதயம் நழுவி கீழே விழுந்ததைபோல் ஒரு அதிர்ச்சி. பேச்சிழந்து நின்றிருந்தாள் அவள்.
அவள் முகத்தை படித்தவாறே கேட்டான் முகுந்தன் 'என்னடா?' எதையாவது பார்த்து பயந்துட்டியா?
பதில் சொல்ல தெரியவில்லை அவளுக்கு. எல்லாம் என் மன பிரமையா? இல்லை என்னை சுற்றி ஏதோ நடக்கிறதா? என் மனம் சரியான நிலையில் தான் இருக்கிறதா? சிந்தனையுடனே அவள் நின்றிருக்க அவர்களை கலைத்தது தாத்தாவின் குரல். சாயங்கால நேரத்திலே வெளியே நிற்காதீங்க. ரெண்டு பேரும் வாங்க உள்ளே.'
குழப்பமான எண்ணங்களுடனே உள்ளே நுழைந்தாள் அவள். சில நிமிடங்களில் தாத்தாவின் மாலை நேர பூஜை துவங்கியது. அவரின் மந்திர உச்சரிப்புகளில், அந்த தெய்வீக ஒலியில் தன்னை மறந்து பூஜை அறை வாசலில் நின்றிருந்தாள் மாதங்கி.
சில் நிமிடங்கள் கழித்து அனைவரும் வீட்டினுள் இருந்த அந்த வேளையில், அவர்கள் வீட்டை கண்டு பிடித்து கேட்டை திறந்துக்கொண்டு மெல்ல உள்ளே நுழைந்தாள் மாதங்கியின் அக்கா ராஜி.
யாரும் அறியாமல் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளும் எண்ணத்துடன் வீட்டின் பக்கவாட்டில் வந்து நின்றாள் அவள். உள்ளே அவர்கள் பேசிக்கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது.
அடுத்த இரண்டு நாட்களில் நடக்க போகும் அவர்களது நிச்சியதார்தத்தை பற்றிய பேச்சுக்கள் ஓடிகொண்டிருந்தன
முகுந்தனை பார்த்து மெல்லக்கேட்டார் தாத்தா 'ஏண்டா நிச்சியத்தை வீட்டிலேயே முடிச்சிடுவோமாடா? ஹோட்டலெல்லாம் வேண்டாம்.
என் தாத்தா திடீர்னு? நான் என் friends எல்லாருக்கும் சொல்லிட்டேன், இப்போ திடீர்னு மாத்தினா எப்படி.?
இதிலே என்னடா இருக்கு. எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிடு. மாதங்கி கொஞ்ச நாள், இந்த வீட்டிலேயே இருந்தா நல்லது.
கொஞ்ச நாள்ன்னா எத்தனை நாள்?
இன்னும் மூணு நாலு நாள். வர அமாவாசை வரைக்கும்.
'அது என்ன தாத்தா கணக்கு.? ஏன் நீங்களும் இந்த பேய் பிசாசு இதையெல்லாம் நம்புறீங்களா? அப்படியே இருந்தா அமாவாசைக்கு அப்புறம் வராதா? அட போங்க தாத்தா. இதுகெல்லாம் பயந்திட்டு இருந்தா வாழ முடியாது. வீட்டிலே நிச்சியம் நடத்த இடம் போறாது தாத்தா. ஹோட்டல்தான் பெஸ்ட்.' அவர் பேச்சை கேட்பதாக இல்லை அவன்.
கடைசியில் மனமே இல்லாமல் தான் ஒப்புக்கொண்டார் தாத்தா. எந்த உயிருக்கும் ஆபத்து இல்லாமல் இந்த நான்கு நாட்கள் கடக்க வேண்டும் என்பதே அவரது வேண்டுதலாக இருந்தது.
நிச்சியதார்த்தம் நடக்கவிருக்கும் அந்த ஹோடேலின் பெயரை கேட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் ராஜி. அவள் மனம் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது ' இந்த திருமணம் நடக்ககூடாது' அதை வாய்விட்டு சொல்லிக்கொண்டே நடந்தாள் அவள்.
இரவு நேரம் பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. முகுந்தனது பாட்டியின் அருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் மாதங்கி.
பக்கத்து வீட்டு கொடியில் அந்த புடவை காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. எதையோ தேடுவதைப்போல் இவர்கள் வீட்டு காம்பவுண்டு சுவற்றை தொட்டு தொட்டு விலகியது அது,
அந்த நேரத்தில் முகுந்தன் வீடு தெருவுக்குள் மறுபடியும் நுழைந்தாள் ராஜி. மாதங்கியை வாழ்கையில் ஜெயிக்க விடக்கூடாது என்பதை தவிர வேறெதையும் யோசிக்கும் நிலையில் இல்லை அவள்.
மழை பெய்ய துவங்க, முகுந்தனின் வீட்டை நெருங்கினாள் அவள்.
ஏதோ யோசித்தபடியே திரும்பியவளின் கண்ணில் பட்டது பக்கத்து வீடு. அந்த வீடு ஏனோ சட்டென அவளை ஈர்த்தது. அதையே பார்த்தபடி நின்றாள் அவள். கொடியில் இருந்த புடவை காற்றில் ஆடியது. அங்கிருந்து யாரோ இவளை அழைப்பது போலே தோன்றியது அவளுக்கு. எதற்கோ கட்டுப்பட்டவளாக அந்த வீட்டை நோக்கி நடந்தாள் ராஜி.
சட்டென மின்சாரம் தடைப்பட அந்த பகுதியே இருளில் மூழ்கியது. மழை இன்னமும் பெய்துக்கொண்டிருந்தது.
சற்றுமுன் வரை ஒளிர்ந்துக்கொண்டிருந்த நிலவு கூட மேகத்தின் பின்னால் ஒளிந்துக்கொள்ள அந்த வீட்டு கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து நின்றாள் அவள். மழையில் நனைந்ததால் ஈரம் சொட்ட நின்றிருந்தாள் அவள்.
அந்த இருளில் அவள் உடலில் லேசான நடுக்கம் பிறந்தது. அவள் தலை முடி கலைந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தது அவள் சிலையாக நின்றிருந்த நேரத்தில் காற்றில் பறந்து வந்த அந்த புடவை நேராக ராஜியின் தோள் மீது விழுந்து அவளை சுற்றிக்கொண்டது
அசைவில்லை அவளிடத்தில். கண்கள் முகுந்தனின் வீட்டையே வெறித்துக்கொண்டிருக்க அப்படியே நின்றிருந்தாள் அவள்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தன. அன்று மாலை ஏழு மணிக்கு நிச்சியதார்த்தம். மாலை ஐந்து மணி அளவில் அந்த ஹோட்டலை அடைந்தனர் முகுந்தன் குடும்பத்தினர்
அப்போது எங்கிருந்தோ வந்தாள் ராஜி. அந்த ஹோட்டலை நெருங்கினாள் அவள். வரவழைத்துக்கொண்ட அழகான புன்னகையுடன் முகுந்தன் வீட்டினர் முன்னால் சென்று நின்றாள் அவள்.
ராஜிக்கா!!!!!!!!! மகிழ்ந்து போனாள் மாதங்கி. 'வாங்க. வாங்க' என்று வரவேற்றவள், இவ எங்க அக்கா 'ராஜலக்ஷ்மி எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் அவள்.
எல்லாரும் பேசிக்கொண்டிருக்க, தாத்தாவின் கவனம் மட்டும் ராஜியின் மீதே இருந்தது. அவருக்குள்ளே அதிர்வலைகள். உள்மனதில் ஏதோ ஒரு உறுத்தல் அவருக்கு.
சில நிமிடங்கள் கழித்து, நிச்சியதார்ததுக்கு ஒவ்வொருவராக வர துவங்க, சீக்கிரம் போய் ரெடியாகு மாதங்கி என்றாள் முகுந்தனின் அண்ணி கவிதா.
'நான் மாதங்கிக்கு அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வரேன்' அவள் கையை பிடித்து அழைத்துக்கொண்டு நகர்ந்தாள் ராஜி.
அவர்களுக்கென ஒதுக்க பட்டிருந்த அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள் ராஜி.
அவள் அருகில் நின்றிருந்தாள் மாதங்கி. அவளை அருகாமையில் பார்த்தவுடனேயே ராஜியிடம் ஏதோ ஒரு பரபரப்பு. அவள் முகத்தில் சின்ன சின்னதான வியர்வை துளிகள்.
மாதும்மா.... என்றாள் அவள். அவள் மாதங்கியை இதுவரை அப்படி அழைத்ததில்லை.
ராஜியின் பார்வையில் இருந்த தீவிரம், மாதங்கிக்குள், ஒரு வித கலக்கத்தை விதைத்தது.
'நான் உனக்கு அலங்காரம் பண்ணி விடவா' ராஜியின் கை மெல்ல உயர்ந்து மாதங்கியின் முகத்தருகில் வந்தது. அவள் விரல் நகங்களை பார்க்கும் போதே மாதங்கிக்குள் ஏதோ ஒரு வித பயம் பரவியது. உடலில் லேசான நடுக்கம்
கொஞ்சம் பின் வாங்கினாள் மாதங்கி. 'இருங்க ராஜிக்கா... முகம் கழுவிட்டு வந்திடறேன் என்றபடி பாத்ரூமுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள் மாதங்கி.
'நான் என் இப்படி பயப்படுகிறேன். அதுவும் என் அக்காவை பார்த்து... குளிர்ந்த நீரை எடுத்து முகத்தில் தெளித்துக்கொண்டாள் மாதங்கி.
வெளியில் கொஞ்சம் கொஞ்சமாக இருள் பரவ துவங்கி இருந்தது.
பாத்ரூமுக்குள் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் மாதங்கி. திடீரென மூச்சடைப்பதைப்போல் ஒரு உணர்வு. யாரோ தன்னை சுவற்றோடு அழுத்துவதைப்போல் போல் தோன்றியது. அ....க்......கா...... அழைக்க முயன்றாள் அவள் வார்த்தை எழவில்லை அவளுக்கு. திணறினாள் அவள்.
வெளியில் அதே நேரத்தில் கவிதாவிடம் சட்டென கேட்டார் தாத்தா ' மாதங்கி எங்கே?
உள்ளே டிரஸ் பண்ணிட்டு இருக்கா தாத்தா.