'தனியே விடாதே அவளை. நீயும் உள்ளே போ' கவிதாவுக்கு உறுதியாக ஆணையிட்டது அவர் குரல்.
கையிலிருந்த குழந்தையை பாட்டியிடம் கொடுத்துவிட்டு, நடந்தவள் அந்த அறையின் கதவை தட்டினாள் கவிதா. அடுத்த வினாடி அங்கே எல்லாமே இயல்பாகின. சட்டென விடுதலை பெற்றதைப்போல் உணர்ந்தாள் மாதங்கி.
கவிதா அறைக்குள் நுழைய, பாத்ரூமின் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் மாதங்கி.
என்னாச்சு மாதங்கி? அவள் முகத்தை பார்த்தபடியே கேட்டாள் கவிதா. இப்படி வேர்த்திருக்கு?
'என்னமோ தெரியலை. கொஞ்ச நேரம் மூச்சே விட முடியலை.' என்றாள் அவள்.
'ஏ.சி போட்டுக்க வேண்டியது தானே.' என்றபடி குளிர் சாதனத்தை உயிர்பித்தாள் கவிதா.
பேசியபடியே கவிதா அங்கே அமர்ந்துக்கொள்ள ராஜியின் முகத்தில் சட்டென இப்போது கனிவு வந்திருந்தது
ஒரு சின்ன தயக்கத்துடன் ராஜியின் அருகில் மாதங்கி அமர அவளை அலங்கரிக்க துவங்கினாள் ராஜி.
மாதங்கியின் பின்னால் அமர்ந்து அவளது நீள் கூந்தலை வாரி பின்ன துவங்கினாள் ராஜி. மாதங்கியின் மீது அவள் விரல்கள் பட்ட ஸ்பரிசத்தில், சட்டென விவரிக்க முடியாத ஒரு நிறைவான உணர்வு ராஜியினுள்ளே. மாதங்கியிடமும் வார்த்தைகளால் சமன் செய்ய முடியாத ஒரு பரவச உணர்வு பிறந்தது.
அவளுக்கு பூச்சூட்டி, அவளை திருப்பி மாதங்கியின் முகத்தை தனது கைகளில் ஏந்திக்கொண்டாள் ராஜி. அவளே அறியாமல் அவள் விரல்கள் மாதங்கியின் கன்னத்தை மெல்ல வருடிக்கொடுத்தன.
ஒவ்வொரு நகையாக எடுத்து, மாதங்கிக்கு அணிவிக்க துவங்கினாள்.
அந்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது. கவிதா கதவை திறக்க வாசலில் நின்றிருந்தான் முகுந்தன். அவன் கையில் இருந்தது ஒரு ஜோடி புது கொலுசு.
'அம்மாடி பத்து நிமிஷம் உன் பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியலையே உன்னாலே அவளை பத்திரமா கூட்டிட்டு வரேன் நீ கவலை படாதே' என்றாள் கவிதா.
அதுக்கில்லை அண்ணி. அவ கொலுசு தொலைஞ்சு போச்சு அதுக்குத்தான் புதுசா ஒரு கொலுசு வாங்கினேன் இதை போட்டுக்க சொல்லுங்க என்றான் அவன்.
அதை வாங்கிக்கொண்டாள் கவிதா. '
குழந்தை அழுதிட்டு இருக்கா. உங்களை பாட்டி கூப்பிடுறாங்க' என்றான் அவன்.
'இதோ வரேன்' என்றவள் கொலுசை ராஜியின் கையில் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் கவிதா.
அந்த கொலுசை பார்த்தபடியே நின்று விட்டிருந்தாள் ராஜி. அதை ஒரு நொடி அவள் அசைத்து பார்க்க மெல்ல ஒலி எழுப்பியது அது.
எதற்கோ கட்டுப்பட்டதைப்போல் நடந்தாள் ராஜி. மாதங்கியின் அருகே சென்று, அவள் கால்களின் அருகில் அமர்ந்தாள் ராஜி.
அவள் பாதத்தை எடுத்து தனது மடியில் வைத்துக்கொண்டாள். ஒரு முறை அவள் கைகள் அவள் பாதங்களை வருடிக்கொடுத்தன.
அந்த கொலுசை அவள் பாதங்களில் அணிவித்தாள் ராஜி. அவள் கால்களின் அசைவில் சத்தம் எழுப்பின அவை. சில நிமிடங்கள் அசைவில்லை ராஜியினிடத்தில்.
பின்னர் அவளை முழுவதுமாக அலங்கரித்து முடித்திருந்தாள் ராஜி.
கண்களில் நீர் சேர எழுந்தாள் மாதங்கி. 'ராஜிக்கா.... என்றாள் மெல்ல. நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜிக்கா. நீங்க யாருமே வர மாட்டீங்களோன்னு நினைச்சேன். ' நீங்க வந்து எனக்கு அலங்காரம் பண்ணி விட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப தேங்க்ஸ் ராஜிக்கா. பதிலில்லை ராஜியிடம்.
'எனக்கு உங்களை பார்க்கும் போது அம்மாவை பார்க்கிற மாதிரி இருக்கு. அம்மாவே இங்கே வந்த மாதிரி இருக்கு. நான் ஒரு தடவை உங்களை அம்மான்னு கூப்பிடவா?'
அப்படியே அவள் தோளில் சாய்ந்த மாதங்கி 'அம்மா...' என்றாள். அம்மா 'தேங்க்ஸ் மா.' மாதங்கியின் கண்களில் வெள்ளம்.
மாதும்மா.... அவள் உதடுகள் மெல்ல உச்சரிக்க, அவள் தலையை வருடிக்கொடுத்தாள் ராஜி..
கவிதா வந்து அழைக்க, கண்களை துடைத்துக்கொண்டு அவளுடன் நடந்தாள் மாதங்கி.
மேடையில் நின்றிருந்தாள் மாதங்கி. அவள் அருகில் முகுந்தன். மாதங்கியின் சார்பில் சென்னையிலேயே இருக்கும் அவளது தாய் மாமாவும் அத்தையும் வந்திருந்தனர்.
பெரியவர்கள் தட்டு மாற்றிக்கொள்ள அங்கே சந்தோஷ அலைகள்.
சில நிமிடங்கள் கழித்து, மாதங்கியின் கையில் மோதிரத்தை அணிவித்தான். யாரும் அறியா வண்ணம் அவள் கையை தனது கைகளுக்குள் பொத்திக்கொண்டு, அவள் காதில் எதோ கிசுகிசுக்க, அவள் முகத்தில் வெட்க பூக்கள்.
மேடையின் கீழே நின்றிருந்தாள் ராஜி. அவர்கள் இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருக்க இருவரையும் மாறி மாறிப்பார்த்தன அவள் கண்கள். இமைக்க மறந்திருந்தன அவை. அசைவில்லை அந்த பெண்ணிடத்தில்.
நிச்சியதார்த்தம் முடிந்து, அனைவரும் சாப்பிட்டு முடித்து கிளம்பினர்.
இரண்டு மூன்று கார்களில் எல்லாரும் பிரிந்து கிளம்ப, யார் எந்த வண்டியில் வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
வீட்டை அடைந்தனர் அனைவரும். சில நிமிடங்கள் கழித்துதான் அந்த உண்மை புரிந்தது. முகுந்தனை காணவில்லை.!!!!!!!
எங்கே அவன்? பதில் யாருக்கும் தெரியவில்லை. அவனது கைப்பேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தவிப்பின் எல்லையில் இருந்தாள் மாதங்கி. என்னவாயிற்று அவனுக்கு? திசைக்கொருவராக தேடி சென்றனர் அவனை.
தாத்தா கேட்ட முதல் கேள்வி ராஜி எங்கே? அவளையும் காணவில்லை. தாத்தாவின் கவனம் முழுவதும் மாதங்கியின் மீது இருந்தது . முகுந்தனை கவனிக்கவில்லை அவர்.
இப்படி சொல்லாமல் எங்கேயும் போக மாட்டானே அவன்???
மாதங்கியிடம் கேட்டார் அவர் ராஜியை கடைசியா நீ எப்போ பார்த்தே?
எனக்கு அலங்காரம் பண்ணி விட்டாங்க. அதுக்கு அப்புறம் அவங்களை நான் பார்க்கலை.
தாத்தாவின் முகத்தில் தீவிரம் குடிக்கொண்டது.
ஏன் தாத்தா அவங்களை பத்தி கேட்கறீங்க? அவரை கவலையுடன் பார்த்தபடியே கேட்டாள் மாதங்கி.
பதில் சொல்லவில்லை அவர். பூஜை அறையில் சென்று கண் மூடி அமர்ந்தார் தாத்தா.
தொடரும்...
{kunena_discuss:781}