அங்கே ராம் “ வழி விடுகிறாயா?” என்றான்.
பிறகே சுதாரித்தவள் அவனுக்கு வழிவிட்டு, தான் உணர்ந்தது சரிதான் என்று நினைத்தாள். இருவரும் ஒருவார்த்தைக் கூட பேச வில்லை. அவனின் களைத்தத் தோற்றத்தைப் பார்த்து, ராமிடம் “பாத்ரூம் அங்கிருக்கிறது” என்றாள். ராம் பேசாமல் உள்ளே சென்றவன் திரும்பி வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவுடன், மைதிலி காபி கொடுத்தாள். ஒன்றும் பேசாமல் காபியைப் பருகியவன், குழந்தையைக் கண்ணால் தேடினான். அப்பொழுது குழந்தை சிணுங்க ஆரம்பிக்க உள்ளே சென்ற மைதிலியைப் பின் தொடர்ந்தான்.
ஷ்யாம் விழித்து அவன் அம்மாவிடம் செல்லம் கொ ஞ்சிக் கொண்டிருந்த போது உள்ளே சென்ற ராமைப் பார்த்து ஆச்சரியமடைந்தவன், அப்பா என்று அவனிடம் தாவினான். இது ராமிற்கு பெரிய அதிசயமாக இருந்தது. சற்று நேரம் குழந்தையிடம் செலவழித்து விட்டுத் திரும்பியவன், மைதிலியின் சத்தம் இல்லாத கண்ணீரைக் கண்டவன் மனதுக்குள் துணுக்குற்றான். மைதிலி தன்னைச் சமாளித்துக் கொண்டு குழந்தையை அழைத்துப் போய் சுத்தம் செய்து விட்டு, பாலைக் கொடுத்து பருக வைத்தாள்.
அதுவரை பேசாமலிருந்தவன், மைதிலியிடம் “தேங்க்ஸ் மைதிலி.” என்றான்
“எதற்கு?”
“குழந்தைக்கு என்னை ஏற்கனவே தெரிய வைத்ததற்கு. நம்மிருவர் பிரச்சினையிலும் குழந்தையின் நலனை மனதில் வைத்து அதைக் காட்டாமல் மறைத்திருக்கிறாய். அதற்காக”
“அது என்னுடைய கடமை.”
“இன்று மதியம் நாம் கிளம்ப வேண்டும். மிகவும் வேண்டிய சாமான்கள் மட்டும் எடுத்துக் கொள். மற்றதை இங்கேயே டிஸ்போஸ் செய்து விடலாம்”
“எங்கே வர வேண்டும்.? எதற்காக வரவேண்டும்.?
“நம் வீட்டிற்கு. என் மனைவியாக, என் குழந்தைக்கு அம்மாவாக வரவேண்டும்”
“இத்தனை நாள் நான் தேவைப்பட வில்லை. இப்போது மட்டும் எதற்கு?”
“தேவைப்படவில்லை என்று யார் சொன்னது? அந்த வீட்டை விட்டு யார் உன்னைப் போகச் சொன்னது? “ என்றான்
“ஆம். நானாகத்தான் வந்தேன். ஆனால் இத்தனை நாள் அதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரிய வில்லையே. “
“வீண் விவாதம் வேண்டாம் மைதிலி. நான் நாளைக் காலையில் அங்கே இருந்தாக வேண்டும். போகும் வழியில் உன் அலுவலகக் கணக்கை வேறு முடிக்க வேண்டும்.”
“அலுவலகத்தில் ஒரு மாதம் நோட்டிஸ் கொடுக்க வேண்டும்.”
“அதெல்லாம் ஏற்கனவே நான் பேசி முடித்து விட்டேன். நீ கிளம்பும் வழியைப் பார். நான் ஒரு இரண்டு மணி நேரம் உறங்கி விட்டு வருகிறேன்" என்று கூறியபடி குழந்தையை அழைத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்றான். பிறகு நினைத்தவனாக குழந்தை பெயரென்ன என்றான். ஷ்யாம் என்றாள்.
சற்றுக் கழித்து உள்ளே வந்து போது, ராமின் மார்பில் ஷ்யாம் தூங்கிக் கொண்டிருந்தான். கண்ணீர் வழிய அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மைதிலி.
தொடரும்
{kunena_discuss:887}