(Reading time: 19 - 38 minutes)

13. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

துளசியின் குழந்தையை ராம் சரணிடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து அவசர அவசரமாக விலகிய டாக்டர். சுபா, நேரே, தன் கணவர் டாக்டர், பாலாஜியின் அறையை நோக்கிச் சென்றார். அப்பொழுதுதான், ஒரு பேஷண்டைப் பார்த்து முடித்து தன் ரவுண்ட்ஸ் போக, தன் உதவியாளரிடம் கூறி விட்டு , தயாராகி வெளியே வந்தவர், குழம்பிய முகத்துடன், ரூமிற்க்குள், நுழைந்த மனைவியைப் பார்த்து.....

"என்னம்மா... ஏதோ மாதிரி இருக்கிறாய்?.... "பாலா நான் ஏதோ தப்பு செய்தாற் போல தோன்றுகிறது" என்று மொட்டையாக சொன்னவள,

"சுபி, முதலில் விஷயத்தை சொல்லு, எதற்கு இந்த பதட்டம்... டாக்டர்கள் எதற்கும் பதட்டப் படக் கூடாது என்று உனக்கு தெரியாதா.... வா.. உட்கார்... இப்பொழுது சொல்லு... பின் எது சரி,... எது தவறு... என்று பார்க்கலாம்"

Nizhal nijamagirathu

"பாலா , துளசிக்கு குழந்தை பிறந்து விட்டது.... ஆண் குழந்தை.... அப்படியே சரணை உரித்து வைத்தாற் போல் இருக்கிறான்."..

"என்ன இது... சுபா, ஒரு டாக்டர் போல பேசு.. எந்த குழந்தையும் யார் ஜாடையிலாவது இருக்கத்தான் செய்யும்... ஏழு தலை முறை ஜாடை வரலாம்.... இதில் என்ன அதிசயம்... குழந்தை சரண் போல இருக்கிறான் என்று... நாம் இது பற்றி, ஏற்கனவே பேசி விட்டாம்.... மறந்து விட்டாயா என்ன... எதையாவது பேசி குட்டையை குழப்பாதே" என்றார் கண்டிப்புடன்.

"ஆம் பாலா, பேசி விட்டோம் தான்..... ஆனால்.... அன்று சரணை அழைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது தானே.... அன்று... , கரண் தன் விந்தணுக்களின் சாம்பிள் கொடுத்து சென்றவுடன், நம் வேண்டுகோளின்படி சரணும் தன் சாம்பிளை கொடுத்துச் சென்றான்... உடனே லேபிள் பரிசோதனக்கு அனுப்பினேன்..... நானும் உடன் சென்று பரிசோதனை மையத்தில் இருவர் விந்தணுக்களின் தரம் பற்றி அறிந்ததில்..... உங்களுக்குமே தெரியுமே... துர்ரதிர்ஷ்டவசமாக ராம் கரணது விந்தணுக்கள் நோயின் காரணமாக ஒரு குழந்தையை உருவாக்கும் தகுதியை, இழந்து விட்டிருந்தன, ஒரு வேளை முயன்றாலும் சாத்தியம் குறைவே என்று ரிப்போர்ட் அறிக்கை தெரிவித்திருந்தது.... அந்த சமயத்தில் ராம் சரணது, விந்தணுக்கள் சாம்பில் அவன் எல்லா விதத்திலும், குழந்தை பெற தகுதியுடைய முழுமையான ஒரு ஆண்மகன் என்று அறிந்ததில், மகிழ்ச்சி அடைந்த நான், ராம் சரணை கூப்பிட்டு, அவனிடம் சகல உண்மைகளையும் உங்கள் எதிரில் தானே சொன்னேன்... நிலைமையை அவனுக்கு விளக்கி விட்டு, என்ன செய்வது , சாகப் போகும் ராம் கரணுக்கு எப்படி இந்த விழயம் சொல்ல முடியும் ,..... இந்த உண்மை அறிந்தால், தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் அவன் மரணத்தை அப்பொழுதே, கை தட்டி அழைப்பது போல் ஆகி விடுமே என்ற போது, கரண் கையெழுத்திட்டு கொடுத்திருந்த ஒரு சில ஆவனங்களும் துணை புரிந்தன..

அன்று, ராம் சரண் ஒரு முடிவுக்கு வந்து, தன் அண்ணன் மரணித்திலாவது நிம்மதியை அடையட்டுமே, ... அவன் ஆசைப்படி, அவன் தனக்குப் பின் தன் வாரிசு ஒன்றை விட்டு விட்டு செல்வதாக நினைக்கட்டுமே, .... அந்த நல் எண்ணத்தில், தனது விந்தணுக்களை தானமாக தந்து அதில் துளசியின் கருமுட்டையோடு இணைத்தால் என்ன என்று கேட்டதால், டாக்ரான நாம் இப்படி செய்யலாமா, தொழில் தர்மம் என்று ஒன்று இருந்த போதிலும், நமது குடும்ப நண்பர் மகன், அதுவும் அவன் சம்மதத்துடன் செய்கிறோம் என்றே இந்த காரியத்தை செய்தோம்..... இதில் நாம் ஒன்று நினைக்க, கடவுள் விருப்பம் வேறாகி விட்டது..... நாம் டிரிட்மெண்ட் ஸ்டார்ட் செய்தவுடன், எதிர் பாராத விதமாக ராம் கரண் இறந்து விட, ராம் சரண் துளசியை திடிரென மணக்க நேர்ந்து விட்டது...... துளசியும் கருத்தரிக்க, சரணோ, நம்மிடம் குழந்தையின் தந்தை பற்றி இனி எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம், தன் பெற்றோர் உட்பட, என்று சொல்லி விட்டதால், இத்தனை நாள் நாமும் அது பற்றி எதுவும் செய்யவில்லை... இப்பொழுது பார்தீர்களா, குழந்தை சரணை உரித்து வைத்திருக்கிறான்..... துளசிக்கு எதாவது சந்தேகம் வந்து விட்டால்,,, என்னாவது?.... என்ற சுபாவை,

டாக்டர் பாலாஜி, "சுபா.... ஏன் டென்ஷனாகிறாய்.... சுபி, பார்... ஆஸ் அ டாக்டர் அண்ட் அ குட் பிரண்ட், நீ என்ன செய்யக் கூடுமோ, செய்து விட்டாய்.... கொஞ்சம் வேறு மாதிரி யோசி... இந்த விஷயம் சரணுக்குத்தான் தெரியுமே.... தன் அண்ணன் பொருட்டு அவனுமே இந்த பெரிய தியாகத்தை செய்திருக்கிறான்... அவனும் பாவம் நினைக்காதது எல்லாம் நடந்து விட்டது.... நீ துளசியை நினைத்துப் பார்... அவள் ஒரு சாதாரண இந்தியப் பெண்.... என்னதான் பாட்டிக்காக என்று வாடகை தாயாக இருக்க அன்று சம்மதித்து இருந்தாலும், அவளது கழுத்தில் சரண் கையால் தாலி... அது நல்லது தானே..... குழந்தை இப்பொழுது சரணது ஜாடையில் இருப்பதால், ஒரு வேளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சரணே அவளிடம் சொல்லி விட்டாலும் , நன்மையே... உண்மையை சொல்லுவது சரணது உரிமை... அதை நாம் மதிக்க வேண்டும்.... துளசியும் தனது கணவனது குழந்தையைத் தான் கருவில் சுமந்தோம், என்று மகிழ்ச்சியே அடைவாள்... அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையை தொடங்கலாம்..... இப்பொழுது போய், நீ வேறு எதையாவது சொல்லி அவள் குழம்ப வேண்டாம்.... அவள் மன ரீதியாக பாதிக்க படலாம்...

நாம் ஏன் அந்த குடும்பத்தில் குழப்பம் உண்டாக்க வேண்டும்.... கடவுள் மேல் பாரத்தை போடு... அந்த மச்சம் கூட கடவுள் கொடுத்திருக்கும் ஒரு வரமே... சரண் அவன் வாழ்க்கையை பார்த்துக் கொள்வான். எனக்குத் தெரியும்... மேலும், என் நண்பரும் அவர் மனைவியும், இந்த குழந்தைக்காக எதுவும் செய்வார்கள்... துளசியை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள்.... இப்பொழுது கிடைத்த இந்த சந்தோஷம் அவர்களுக்கு நீடித்து இருக்கட்டும்... வா.... போகலாம்... நானும் என் நண்பனை வாழ்த்த வேண்டும்" என்று மனைவியை அணைத்து ஆறுதலாக சொல்லி அவரை அழைத்துச் சென்றார்.

பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது துளசிக்கு....தனது மைந்தனின் அழகில் பூரித்து போய் இருந்தாள்... நல்ல நிறமாக, சுருட்டை முடியுடன், அகன்ற நெற்றியும் பெரிய கண்களும், கூர் மூக்கும், செப்பு வாயும், நீண்ட கை கால்களுடன் சரணது ஜாடையிலே இருந்த தன் மகனை மடியில் கிடத்தி கொண்டு வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி.

என்னம்மா, பாப்பாவை இப்படி உற்று உற்று பார்க்கிறாய்? இப்படி ஊற்றுப் பார்க்க கூடாது..... தாயே என்றாலும் கண் படும்... குழந்தை தூங்குகிறான்... தொட்டிலில் விடுகிறேன், என்று அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி தொட்டிலில் போட்டு ஆட்டினாள் சியாமளா.

"அப்படியே என் மகன் ஜாடையிலேயே இருக்கிறான்... அந்த பெரிய கண்கள் மாத்திரம் உன்னைக் கொண்டிருக்கிறான். மொத்ததில் கரணும், சரணூம் இப்படியேதான் பிறந்த பொழுது இருந்தார்கள். பார்த்தாயா... கரணுக்கும், சரணுக்கும், காதருகே உள்ள இந்த மச்சம் மாத்திரம் தான் அவர்களை வேற் படுத்திக் காட்டும்... இவன் சரணைக் கொண்டிருக்கிறான்." என்றவர், 'தன் மகனை கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என் மகன் கரணுக்கு.. எங்களுக்காக இவனை தன் வாரிசாக கொடுத்து விட்டு சென்று விட்டான்' என தன் மனதிற்க்குள் நினத்தவர், தன் மருமகள் அறியாமல் கண்களை துடைத்துக் கொண்டார்.

அவர் அவள் அறியாமல் கண்களை துடைத்ததைப் பார்த்த துளசி, 'பாவம் அத்தை.. இந்த குழந்தை, தன் மூத்த மகன் கரணின் வாரிசு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். அப்படியே இருக்கட்டும்... இந்த தாய் மனம் அப்படியே எண்ணி குளிரட்டும்... எனக்கு தெரிந்த உண்மை என்றும், என்னிடம் இருந்து வெளியே செல்லக் கூடாது' என்று சத்திய பிரமானம் செய்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.