"என்ன மாமா சௌக்கியமா.. சாரதா மாமி எப்படி இருக்கா? ..போன வாட்டி வந்தப்போ ஒரே கால் வலின்னா.. அம்மா மாமிக்கோசரம் எதோ கோட்டக்கல் ஆயுர் வேத வைத்தியமாம்.. எண்ணைய் கொடுத்து விட்டிருக்கா.. அதை தடவிண்டு ஊறி குளிச்சா நல்ல ரிலீஃப் இருக்குமாம்..எடுத்துண்டு வந்திருக்கேன்" என்ற கார்த்திகேயனை..
தன் சிந்தனையில் இருந்து விடுபட்டு, "வாங்கோ மாம்பிள்ளை.. நன்னா இருக்கேளா.. ஆத்துல பெரியவா சௌக்கியம் தானே" என்றபடி விஜாரித்தார் ராமமூர்த்தி.
"வாங்கோ உள்ளே போகலாம்.. என்னடா குட்டிகளா, தாத்தா கிட்ட வாங்கோ" என கல்யாணியின் சின்ன பெண்ணை தூக்க,
அங்கே இருந்த வசந்த், பெரியவளை தூக்கிக் கொண்டே தன் இரண்டாவது அத்திம்பேரை குசலம் விசாரித்தான். கல்யாணியும் , கார்த்திகேயனும் தங்கள் சாமான்களை எடுத்து கொண்டு பேசியபடி உள்ளே சென்றனர். வாயெல்லாம் பல்லாக, சாரதாவும் தனது இளைய மருமகனை வரவேற்றார்.
"இந்தாங்கோ மாமி.. எல்லாம் தோட்டத்துலே காய்ச்சது.. அம்மா கொடுத்து விட்டா.. நம்மாத்து எலிமிச்சை பழம் நன்னா ஜூசோட இருக்கும்.. அதான் அம்மாவே ஐம்பது பழத்தை நறுக்கி ஊறுகாய் போட்டு கொடுத்தனுப்பினா.. இது முருங்கை காய், வாழைக்காய், அதோட ரஸ்தாளி பழம் தார் விட்டிருந்தது.. அதுவும் இருக்கு.. நல்ல பிஞ்சு கத்திரிக்கயும் பையிலே இருக்கு..ரஞ்சனி அக்கா வந்துருக்கிரதா கல்யாணி சொன்னா, அவாத்துக்கும் எல்லாம் எடுத்துண்டு வந்தோம்.. கல்பூ அம்மாவுக்கு எல்லாத்தையும் எடுத்து கொடுத்து ஒத்தாசை பண்ணு" என்றான் கார்த்திகேயன்.
"கார்த்திக், எனக்கு காலையிலே எழுந்தது ரொம்ப டயர்டா இருக்கு.. பசிக்கிறது வேறே.. அம்மா முதல்ல சாப்பிட ஏதாவது கொடும்மா?.. இந்த ஊர்ல கிடைகாத காய்கறியா.. அம்மாவும், பிள்ளையும் சொன்னா கேட்க மாட்டா.. இதெல்லாம் எங்க தோட்டக்காரன் கடையிலை வித்து காசு வாங்கிண்டு வரேன்னான்.. இவா எங்க கேக்கறா" என்று அலுத்து கொண்டாள்.
"இது என்ன பேச்சு கல்பூ" என்று அவளை கடிந்து கொண்ட கார்த்திகேயன்,
"மாமி தப்பா எடுத்துக்காதீங்கோ" .. " மஹதி உனக்கு இன்னைக்கு பர்த்டே இல்லையா.. இந்தா எங்களோட சின்ன கிப்ட்.. அம்மாவே தன் கையால செஞ்சது" என்றவன்,
அழகிய வேலைபாடுடன் கூடிய இந்த காலத்து டெரகோட்டா பேஷன் டிசைன் மயில் வடிவ கழுத்து பென்டன்டுடன் கூடிய செயின், காது தோடுடன் அடங்கிய ஒரு செட் நகையை கொடுத்தான்.
"தாங்க்ஸ் அத்திம்பேர்.. சுப்பராக இருக்கு.. தையூ மாமிக்கு போன் பண்ணி ஸ்பெஷலாக சொல்லரேன்" என்றபடி மஹதி அந்த ஆர்ட்டிபிஷியல் ஜுவல்லரியை ஆசையாக வாங்கிக் கொண்டு, மீண்டும் மீண்டும் தன் நன்றியை தெரிவித்தாள்.
அங்கே நின்றிருந்த ரஞ்சனி பொறாமையுடன் அதையே பார்த்து கொண்டிருக்க, கார்த்திகேயன் அதையறியாமால், ரஞ்சனிக்கும் தன் தாய் அனுப்பிய வேறு விதமான நகை செட்டை கொடுத்தான்.
"இதெல்லாம் இப்போ, நாலாயிரம் , ஐந்தாயிரம்ன்னு வெளியிலே விக்கறா.. எங்க மாமியார் கேட்டாதானே, தன் கையால செஞ்சி ஃப்ரீயாவே எல்லோருக்கும் இப்படி எதுக்காகவாது கொடுத்தா அவாளுக்கு மனசுக்கு திருப்தியாம்"
இப்படி ஒரு பெண்ணா என்று பெற்றவர்கள் மனதுக்குள் நொந்து கொள்ள, கார்த்திகேயன் மனைவியை அடக்கும் வழி தெரியாமல், அங்கே வந்த தன் சகலையிடம் பேச விரைந்தான்.
You might also like - Krishna Saki... A family oriented romantic story...
ஒரு வழியாக அனைவரும் தங்கள் காலை சிற்றுண்டியை முடித்து, மதிய உணவையும் முடித்து, மாலை அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கு செல்ல தயாரானார்கள். அனைவரும் செல்வதற்கு ஏற்ப கார்த்திகேயன் கல்யாணியின் ஆட்சேபனையை பொருட்படுத்தாது வாடகை காரை ஏற்பாடு செய்ய , இரண்டு காரில் அவர்கள் அனைவரும் பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றனர்.
முதலில் அஷ்ட லக்ஷ்மிகளையும் பார்த்து வணங்கி விட்டு, பெரியவர்கள் கடற்கரை மணலில் பெட் ஷீட்டில் அமர்ந்து கொண்டு பேச துவங்க, சிறியவர்கள் கடலலையில் நனைந்து கும்மாளம் போட்டபடி இருந்தனர். அப்பொழுது அங்கே வந்த சுண்டல், மாங்காய், பஞ்சு மிட்டாய் என்று வயிற்றுக்குள் தள்ளியபடியே இருந்தனர்.
ஒரு வழியாக கடல் அலையில் நனைந்து ஆடி களைத்தவர்கள், வீட்டுக்கு கிளம்பலாம் என தீர்மாணிக்க, சும்மா இல்லாமல் கார்த்திகேயன் மஹதியின் பிறந்த நாளை ஒட்டி,தனது சார்பாக ஹோட்டலில் இரவு உணவை முடிக்கலாம் என்று சொல்லிவிட, கல்யாணியின் முணுமுணுப்பை பொருட்படுத்தாமல் அன்றையை மொத்த செலவையும் தானே செய்தான்.
'ரயில்வே ஆபிசர், பணம் நிறைய இருக்குன்னு பெரிய பந்தா பண்ணறான்' என்று ரஞ்சனியிடம் காதில் கடித்தபடி இருந்தான் சிவகுமார். நமக்கு ஒரு காலம் வராதா என்ன என்றபடியே புலம்பி கொண்டிருந்தவனை ரஞ்சனியுமே லட்சியம் செய்யவில்லை.
அவளுக்கும் தெரிந்துதான் இருந்தது , தனது கணவனின் அடாவடித்தனத்தை.. என்ன செய்வது, படிப்பும் சுமார், அவளுக்கும் வேலை இல்லை .. கணவனை அண்டி பிழைப்பவள்.. ஏதோ குழந்தைகள் இன்றாவது நன்றாக அனுபவிக்கட்டும் என்று அவனை கண்டு கொள்ளாமல், தன் உறவுகளுடன் அன்று சற்று பிரியமாகவே நடந்து கொண்டாள்.
ஒரு வழியாக இரண்டு பெண்களும் பிறந்தகம் வந்து தங்கள் பிள்ளை, கணவன்மார்களுடன் சீராடியவர்கள் தங்கள் புகுந்த வீட்டுக்கு பிறந்த வீட்டில் இருந்து முடிந்தவரை சுருட்டி கொண்டு அன்று தான் கிளம்பினர்.
ரஞ்சனி, போகும் பொழுதும் எப்படியாவது தனக்கு பணம் ஏற்பாடு செய் என்று கட்டளையாக சொல்லிவிட்டு தன் கணவனுடன் சென்றாள். கல்யாணியை பிறந்த வீட்டில் விட்டு விட்டு அடுத்த நாளே சென்று விட்ட கார்த்திகேயன், மீண்டும் விடுமுறை முடியும் நாளன்று திரும்பவும் வந்து அவன் குடும்பத்தை அழைத்து சென்றான்.
தொடரும்
{kunena_discuss:909}