(Reading time: 19 - 37 minutes)

"ன்ப்பா அதிலிருந்து ஒரு பத்து லட்சம் கடனா கொடுக்கக் கூடாதா என்ன?.. அந்த டெபாசிட் பணத்தோட வட்டியை மாத்திரம் நீங்க யூஸ் பண்ணலாமா?" இப்ப அந்த பணம் பிக்சட் டெபாசிட்டா வேஸ்டா தானே இருக்கு?" ..  என விடாமல் ரஞ்சனி வார்த்தையாட,

மேலே அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல், ராமமூர்த்தி சாரதாவை நோக்கி, 'ஏதாவது செய்யேன்' என கண்களால் இறைஞ்ச,

அதுவரை வாயை திறக்காமல் கணவர் சமாளித்துக் கொள்வார் என்று இருந்த சாரதா, "ரஞ்சீ.. என்ன நீ ஆத்துக்கு புதுசா இப்பதான் மாப்பிள்ளை வந்திருக்கிறார்.. இப்படி எதையாவது பேசினால் எப்படி.. என் பொறாந்தாத்து குத்தகைப் பணம் பற்றி பேசாதேன்னு உனக்கு எத்தனையோ வாட்டி சொல்லியாச்சு.. அது எனக்கு மாத்திரம் சொந்தமில்லை.. என் காலம் இருக்கும்வரைக்கும், என் அண்ணன் குடும்பத்துக்காக காத்திருப்பேன்.. டெபாசீட்ல வட்டி கூட நான் பாதியை எடுத்துண்டு, மீதியை அதே அக்கவுண்ட்ல போட்டுடறேன்.. அதை பற்றி நீ கேட்காதே" என கோபமாக சொல்ல,

"மஹதி, உங்க அம்மா எந்த குத்தகை பணத்தை பற்றி பேசறாங்க?"  என அஜய் திடிரென இவர்கள் பேச்சில் நடுவில் உள்ளே நுழைய,

குடும்பம் மொத்தமும் அஜய் எதற்கு பணத்தை பற்றி கேட்கிறான் என ஆச்சர்யமாக பார்க்க,...  அது வரை அமைதியாக எல்லாவற்றைம் ஒரு பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த பைரவி கூட சற்றே வியந்து அஜய்யை நோக்க,  அவன் தன் பார்வையாலேயே அவளை அமைதியாக இருக்கும்படி வேண்டினான்.

"அதானே பார்த்தேன்.. 'பணம்னா பொணம் கூட வாயை திறக்குமாம்'.. அமெரிக்க மாப்பிள்ளை மாத்திரம் எம்மாத்திரம்.. பரம்பரை பணம்ன்னு சொன்னவுடன் தனக்கும் ஏதாவது கிடைக்கும்மான்னு பார்க்கிராறோ என்னவோ.. சின்ன மாப்பிள்ளை, அதுக்கெல்லாம் இத்தனை நாளா இருக்கிற எங்களுக்கே உரிமை இல்லைன்னு சாரதா மாமி சொல்லாம சொல்லிண்டு இருக்கா.. நீங்க அதை பத்தி தெரிஞ்சிண்டு உரிமை பாராட்ட முடியுமா என்ன?"  என்று நக்கலாக கேட்ட சிவகுமாரை,

"எனக்கில்லாத உரிமையா ?..  ஆக்சுவலி பார்த்தா எனக்கு தான் முழு உரிமையும் கேட்க இருக்கு.. என்ன சொல்லறீங்க அத்தை?"

"அத்தையா?"

"த்தையாஎன்று ஆச்சர்யமாக கேட்ட சாராதாவுக்கு,

"ஆமாம் அத்தையே தான்" என்றான் அஜய்.

"மாப்பிள்ளை நம்ம பக்கத்துல, மாமியாரை அத்தைன்னு சொல்லறது இல்லை.. அம்மான்னு சொல்லுவா, இல்லைன்னா, மூத்த மாப்பிள்ளை சொல்லற மாதிரி சாராதா மாமின்னு சொல்லுங்கோ"  என சாரதா எடுத்துக் கொடுக்க,

ஒரு ஷணம் சின்னதாக சிரித்த அஜய்,  சாரதாவின் அருகே சென்று,  "என் அத்தையை அத்தைன்னு சொல்லாமா வேறே எப்படி சொல்லறதாம்.. எனக்கு உங்களை அம்மான்னு சொல்லறதுல இஷ்டம் தான்.. ஆனா அது என்னவோ, எனக்கு அம்மான்னு சொன்னாலே அவ்வளவா பிடிக்கரது இல்லை.. அத்தோட..அம்மா, அப்பா இவா ரெண்டு பேருமே எனக்கு இப்போ இல்லை.." அவர் கைகளை பிடிக்க

"அஜய், என்னப்பா சொல்ல வரே.. உன் பேரண்ட்ஸை மிஸ் பண்ணரயா? .. எங்க இரண்டு பேரையும் உன்னை பெத்தவாளா நினைச்சுக்கோ" என சாரதா அவன் கைகளை தட்டிக் கொடுத்து ஆறுதல் அளிக்க முயன்றாள்.

"அவர் அம்மான்னு வேணா சொல்லட்டும், அத்தைன்னு வேண்டுமானால் சொல்லிண்டு போகட்டும்.. சொத்தை மொத்தமா உரிமை தனக்குன்னு சொல்லாத வரை சரிதான்"  என சிவகுமார் கிண்டலடிக்க,

"மாப்பிள்ளை"  என அவரை அதட்டினார் ராமமூர்த்தி.. அதற்கெல்லாம் அடங்குபவனா அவன்,  ...

"அத்தை, என்ன இன்னும் புரியலையா.. நீங்க எனக்கு அத்தை தான்" என அஜய் மீண்டும் உணர்ச்சி வசப்பட,

இவன் என்ன குழப்புகிறான் என எல்லோரும் அவனையே பார்க்க, பொறுக்க முடியாமல்,மஹதி, "அஜய், என்னாச்சு.. நீங்க எப்படி வேண்டுமானாலும் அம்மாவை கூப்பிடுங்கோ.. உங்களை யாரும் அப்ஜக்ட் பண்ண மாட்டா.. ரிலாக்ஸ்"

பைரவிதான் முதலில் சுதாரித்தாள்..  "அஜய் விஷயத்தை சொல்லற நேரம் வந்தாச்சு.. சரியா நீயே சொல்லு..  சும்மா பாவம் அவங்களை குழப்பி, நீயும் குழப்பிக்காதே" என,

'ம்"  ........ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன்,  "நீ சொல்லறது சரிதான் பைரவி"  என்றவன்,

"அத்தை, நான் வேறு யாருமில்லை..  நீங்க இத்தனை நாளா வருவாரான்னு வெயிட் செஞ்சுண்டு இருக்கற உங்க அண்ணன் சங்கர நாராயணனோட பிள்ளை தான்..  அமெரிக்கன் லேடியை காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டு, பெற்றவங்களை நிர்கதியா அவரோட ஒரே தங்கையோட விட்டு விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப் போன உங்க அண்ணன் சங்கரோட ஒரே பிள்ளை அஜய் சங்கர நாராயணன் நானே தான்"  என்று பொட்டென்று உண்மையை போட்டுடைத்தான் அஜய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.