அதனால் அவனை பார்க்கும் ஆர்வத்துடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றாள் சங்கவி.. வழக்கமான உபசரிப்புகளுக்குப் பின் சம்யு தான் பிருத்வியை இவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்..
"கவி... இது பிருத்வி..."
ஓ இவன் தான் பிருத்வியா.. "ஹாய்.."
"பிருத்வி இது கவி... என்னோட சிஸ்டர்.."
"ஹாய்... நீங்க தான் கவியா... யுக்தாவோட வாயில் இருந்து அடிக்கடி உங்கப் பேர் தான் வரும்... இப்போ இல்லை சின்ன வயசுல இருந்தே... அப்படி என்ன யுக்தாவுக்கு நீங்க ஸ்பெஷல்... உங்களை பார்க்கனும்ன்னு நான் சின்ன வயசிலேயே நினைச்சிருக்கேன்... ஆனா முடியலை.. இப்போ தான் முடிஞ்சது... நைஸ் மீட்டிங் யூ.."
என்ன இவன் நாம நினைச்சதை இவன் சொல்றான்... அப்போ சம்யு நம்மள பத்தி தான் இவன் கிட்ட பேசுவாளா..??
எப்போதும் சம்யுவுக்கு நாம தான் முக்கியம் என்று நினைத்து கவிக்கு சந்தோஷமாக இருந்தது... அந்த சந்தோஷத்தோடே அவனிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள்...
ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த யுக்தாவின் மனநிலை தான் இங்கு யாருக்கும் தெரியவில்லை... அவள் மனம் முழுக்க சந்தோஷ அலை அடித்துக் கொண்டிருந்தது... பிருத்வி இதுவரை சிறுவயது நிகழ்வுகளை பற்றி இவளிடம் பேசியதில்லை... இப்போது கூட கவியிடம் தான் பேசினான்... ஆனால் அவன் பேசிய விஷயம் தான் இவளுக்கு சந்தோஷத்தை வரவழைத்தது.... அதற்கு காரணம் உள்ளது...
காலாண்டு, அரையாண்டு பரிட்சை விடுமுறையில்... யுக்தா ஊருக்கு போய்விட்டு திரும்பினாலும் அவ்வளவு சீக்கிரம் கவியின் பிரிவை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாது.. ஆனால் அங்கிருந்து புறப்படும் போது... அழாமல் புறப்படுவாள்... இவள் அழுதுக் கொண்டே புறப்பட்டால் அங்கு மூவரும் வருத்தப்படுவார்கள் என்று தான் அழாமல் இருப்பாள்..
இங்கு வந்ததும் அம்மாவிடம் கூட எதுவும் சொல்ல மாட்டாள்... அவர்களும் வருத்தப்படுவார்களே என்று... அவள் வருத்தத்தை துடைக்கும் ஒரே வடிகால் பிருத்வி தான்...
"என்ன பிருத்வி... இந்த கோட்டர்லி ஹாஃப் இயர்லி லீவ் எதுக்கு பத்து நாள் விடுறாங்க... கவிக் கூட ரொம்ப நாள் இருக்க முடியல.... ஆனுவல் லீவ் ரெண்டு மாசம் விடுராங்க இல்ல... அது மாதிரி இந்த லீவ் ஒரு மாசமாவது விடலாமில்ல..." என்று ஆதங்கப்படுவாள்...
அதற்கு அவன்.. "அடிச்சேன்னா பார்த்துக்க... நீ பத்து நாள் இல்லாதது எனக்கு எவ்வளவு போர் அடிச்சுச்சு தெரியுமா... நீ எப்போ வருவேன்னு வெய்ட் பண்ணிக்கிட்டு இருந்தா... நீ இன்னும் கவிக் கூடவே இருக்கனும்ன்னு சொல்ற... உனக்கு எப்பவும் கவி தானே முக்கியம்..." என்று கோபப்படுவான்...
இவளும் அமைதியாகி விடுவாள்.. ஒருவேளை என்னை சமாதானம் செய்ய தான் இப்படி கோபமாக பேசுகிறானா..?? என்று நினைப்பாள்... ஒரு விடுமுறைக்கு அவள் ஊருக்கு செல்ல தயாரான போது... அவன் வந்து "யுகி... நானும் உன்னோட ஊருக்கு வரப்போறேன்... உன்னோட அந்த கவியை நான் பார்க்கனும்... அப்படி என்ன அவ உனக்கு ஸ்பெஷல்... அதை நானும் பார்க்கிறேனே" என்றான், ஆனால் அவன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டேக்கு பயிற்சி கொடுப்பதால் விடுமுறையிலும் பள்ளி இருந்ததால் அவனால் வரமுடியவில்லை..
அவன் அப்படி பேசியது பொறாமை உணர்வால் என்று யுக்தாவுக்கு அப்போது தெரியவில்லை... பின் நியூயார்க் சென்ற பின் அதையெல்லாம் நினைத்து பார்த்த போது தான் அவளால் அதை புரிந்து கொள்ள முடிந்தது.
இப்போதும் கவியிடம் சொன்ன போது சிறுவயது நினைவு இன்னும் இருப்பதால் தானே அவன் கவியிடம் அப்படி பேசியிருக்கிறான் என்று சந்தோஷப்பட்டாள். அவர்களுடன் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தாலும்... அவள் மனம் முழுக்க அந்த சந்தோஷமே நிறைந்திருந்தது.
சப்னா மும்பைக்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் அம்மாவிடம் அவள் காதலைப் பற்றி சொல்லி பிருத்வி வீட்டில் பேச சொல்ல வேண்டும் என்று நினைத்து அவள் ஊருக்கு வந்தாள்... ஆனால் அவள் வந்த நேரம் தான் சரியில்லை... இங்கே அவள் பெரியம்மா மகனுக்கு திருமணம்... திடிரென்று முடிவு செய்யப்பட்டது...
அவளின் அம்மா ஒரு நார்த் இந்தியன்... அப்பா தமிழ்... அம்மாவோட அக்காவின் மகனுக்கு தான் இப்போது கல்யாணம் நார்த் இந்தியன் மேரேஜ்ன்னா நிறைய சடங்குகள் அடங்கி இருக்கும்... சங்கீத், மெகந்தி, ஹல்தின்னு ஏகப்பட்ட பங்க்ஷன்... அவளோட அம்மா தான் இந்த கல்யாணத்தை எடுத்து நடத்தறது... அதனால இப்போ அம்மாக்கிட்ட அவளால பேச முடியல...