“ஹா அதெல்லாம் நாங்க யாரு. அவ வெடிக்கறதுக்கு முன்னாடியே புஸ்வாணமா அடக்கிட்டோம்ல. இருங்கோ அவக்கிட்டையே தர்றேன்.... உன்கிட்ட மாமி பேசணுமாம், இந்தா பேசு”, யார் என்றே சொல்லாமல் ஹரித் தர, வேறு வழி இல்லாமல் பேச ஆரம்பித்தாள் ஸ்வேதா..... அவள் ‘ஹலோ’, என்று கூற அந்தப் பக்கம் மறுமொழி கூறியது அவள் அம்மா அதாவது நம்ம லச்சு மாமி.
“ஹலோ ஸ்வேதா, ஜாகிரதையா போய் சேர்ந்தியா. லக்கேஜ் எல்லாம் சரியா பார்த்து எடுத்துண்டயா. எதுவும் மிஸ் ஆகலையே. ஹரியோட சாமான் இருக்கற பொட்டி ஒழுங்கா வந்துதா. தூக்கிப் போட்டு எதுவும் ஆகலையே. கருவடாம் வேற வச்சிருந்தேன். எதுக்கும் தொறந்து பாரு. ஓடைஞ்சிருக்கப் போறது. ஃபிரஜைல் ஸ்டிக்கர் ஒட்ட சொன்னேனே, செஞ்சியா”, ஸ்வேதாவை பற்றிக் கேட்பதை விட ஹரிக்கு கொடுத்த சாமானைப் பற்றியே அதிகம் கேட்டாள் லச்சு மாமி. கடுப்பில் பல்லைக் கடித்தாள் ஸ்வேதா.
“அம்மா நான் இப்போதான்மா வெளிலையே வர்றேன். இன்னும் ஏர்போர்ட் விட்டு வெளிலக் கூட வரலை. அதுக்குள்ள எங்க இருந்து தொறந்து பாக்கறது. இதுல இந்தத் தீபா வேற வரலை. நானே டாக்ஸி பிடிச்சு போலாமான்னு பார்த்துண்டு இருக்கேன்”
“என்னது..... டாக்ஸி பிடிக்கறையா. கொழுப்பா உனக்கு, அந்தப் புள்ளையாண்டான் வேலை மெனக்கட்டு உன்னைக் கூட்டிண்டு போக வந்தா நீ இப்படி பேசற”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“அம்மா அவரோட ஆம் எங்கன்னு தெரியாதும்மா. இப்போவே லேட் ஆயிடுத்து. இதுல என்னைக் கொண்டு போய் தீபா இருக்கற ஃபிளாட்ல விட்டுட்டு அவர் போக ரொம்ப நேரம் ஆயிடும். நானே மானேஜ் பண்ணிப்பேன்ம்மா”, ஹரிக்கும் சேர்த்து கூறுவது போல் லக்ஷ்மியிடம் கூறினாள் ஸ்வேதா. ஹரி இது எதையும் காதில் வாங்காமல், அருகில் இருந்த ஸ்டார்பக்ஸில் கப்புச்சீனோ வாங்கி ஒன்றை ஸ்வேதாவிடம் தந்து மற்றொன்றை பருக ஆரம்பித்தான். அவளின் அம்மா அந்தப்புறம் ஃபோனில் இருந்ததால், அவளால் மறுத்து எதுவும் கூற முடியவில்லை. அவனை முறைத்தபடியே அதை வாங்கிக்கொண்டாள்.
“அதெல்லாம் ஒண்ணும் லேட் ஆகாது. தீபா தங்கி இருக்கற அபார்ட்மென்ட் பக்கத்துலதான் ஹரியோட அபார்ட்மென்ட்டும் இருக்கு. நேத்து தீபாக்கு உடம்பு சரி இல்லைன்னு அவ ஃபோன் பண்ணினா. நான்தான் உடனே ஹரிக்குப் பேசி உன்னைக் கூப்பிட வர சொன்னேன். அதனால வெட்டித்தனமா பேசிண்டு இருக்காம கிளம்பு. தீபா இருக்கற இடத்துக்குப் போயிட்டு எனக்கு ஃபோன் பண்ணு”, என்று கூறியபடியே காலை கட் செய்தார் லக்ஷ்மி. இந்த அம்மாவோட முடியல என்றபடியே ஹரியைப் பின் தொடர்ந்தாள் ஸ்வேதா. ஹரி தீபா வீட்டுப் பக்கத்தில்தான் இருக்கிறான் என்று சொன்னது வேறு அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. இனி அவனை எப்படி தவிர்ப்பது என்று யோசிக்க...... அவளிற்கு ஒரு வழியும் புலப்படவில்லை. தீபாவின் வீடு சென்றவுடன், முதலில் கௌரிக்கு ஃபோன் செய்து இந்த சிட்டுவேஷனை எப்படி கையாள்வது என்று கேட்கவேண்டும் என்று முடிவு செய்தாள்.
அவள் கௌரியுடன் பேச வேண்டியதை யோசித்தபடியே வர, ஹரி ஸ்வேதாவை சிறிது நிற்குமாறு கூறிவிட்டு அவன் காரை எடுத்து வர சென்றான். பின்னர் அவள் பெட்டிகளை அதில் ஏற்றி இருவருமாக தீபாவின் வீடு நோக்கி சென்றார்கள்.
தொடரும்
{kunena_discuss:964}