பெரும்பாலும் சித்தார்த் விடுமுறை சமயங்களில் யோகா வகுப்பு, கராடே கிளாஸ், ஸ்விம்மிங் கோச்சிங் என்று பிசியாக இருப்பான். அப்போது காவ்யாவிற்கு அபூர்வா தான் துணை.
தந்தை தனக்கு சொல்லிக் கொடுத்த கதைகளை எல்லாம் காவ்யாவிடமும் பகிர்ந்து கொண்டிருந்தாள் அபூர்வா.
ஒரு முறை சித்தார்த் வீட்டிற்கு காவ்யா குடும்பம் வந்திருந்த சமயம். ஹாலில் காவ்யா மட்டும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கே ஒரு கரப்பான் பூச்சி ஊர்ந்து வர காவ்யா பயத்தில் அலறினாள்.
“என்ன காவ்யா என்னாச்சு”
“அத்தை அங்க பாருங்க” அங்கே பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு ஒரு பெரிய கரப்பான் காவ்யாவை முறைத்துக் கொண்டிருந்தது.
“பத்மா அந்த துடைப்பம் எடுத்துட்டு வா”
அந்த சமயம் பார்த்து அபூர்வா, சித்தார்த், நிலா, கார்த்திக் அனைவரும் பார்க்கில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
காவ்யாவிற்கு சற்றே காய்ச்சல் இருக்கவும் அவள் மட்டும் செல்லாமல் வீட்டில் இருந்தாள்.
“அபி சித்து....உள்ள வராதீங்க...அங்க பூச்சி.....கரப்பான் பூச்சி” காவ்யா மீண்டும் அலறவும் சித்தார்த் பெரிய வீரனாக செருப்பை எடுத்துக் கொண்டு அதை அடிக்க முற்பட அதே சமயம் பத்மாவும் துடைப்பம் எடுத்து வர அபூர்வா ஓடி வந்து எல்லோரையும் தடுத்தாள்.
“ஐயோ அடிக்காதீங்க” அதற்குள் கதவிடுக்கில் மறைந்து கொண்டிருந்த கரப்பான் பூச்சியை மறைத்தவாறு அபூர்வா நின்று கொண்டாள்.
“காவ்யா உன்னை கடிச்சுதா இந்த பூச்சி” அபூர்வா கேட்கவும் இல்லை என்று தலை அசைத்தாள்.
“டாடி சொல்லிருக்காங்க. பூச்சி, அனிமல்ஸ், பறவை எல்லாம் நல்ல உயிர். அதெல்லாம் தப்பு செய்யாதாம். நாம ஏதாச்சும் அத டிஸ்டர்ப் பண்ணா தான் நம்மள அட்டக் பண்ணுமாம். அது கடிச்சா கூட அத மன்னிச்சு விடனும்”
“கடிச்சா கூடவா” சித்தார்த் இப்போது சந்தேகம் கேட்டான்.
“அது வேணுமனே கடிக்காது சித்து. பயந்து போய்தான் கடிச்சிடும். பாவம்ல அது பூச்சி தானே. மனுஷங்க தான் வேணும்னே தப்பு செய்வாங்க. மத்தவங்கள கஷ்டப் படுத்துவாங்க. அப்படி செய்ற கெட்ட மனுஷங்கள தான் நாம அடிக்கணும். டாடி அப்படி தப்பு செய்ற மனுஷங்கள தான் ஷூட் செய்வாங்க. நல்ல மனுஷங்க அப்புறம் மரம், செடி, பூச்சி, அனிமல்ஸ், பறவை எல்லோர் மேலேயும் நாம அன்பா இருக்கனும். தெரியாம தப்பு செஞ்சா இனிமே தப்பு செய்ய கூடாதுன்னு சொல்லிக் கொடுத்து மன்னிச்சு விட்ரனும்”
எட்டு வயதில் தத்துவ வகுப்பே எடுத்து விட்டிருந்தாள் அபூர்வா. சித்தார்த் காவ்யா மனதில் இது ஆழப் பதிந்து போனது.
அன்று அவள் காப்பாற்றிய கரப்பான் பூச்சி தான் பின்னாளில் தனது நன்றியாக அபூர்வாவிற்கு பேரும் புகழும் பெற்றுத் தர போகிறது என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
அப்போதில் இருந்தே காவ்யாவினுள் நிறைய மாற்றம். அபூர்வாவை போல அனைவரிடத்திலும் அன்பாக இருக்கக் கற்றுக் கொண்டாள்.
சென்னை வந்தடைந்த குடும்பத்தினரையும் காவ்யா குடும்பத்தினரையும் விஜயகுமார் சிதம்பரம் அழைத்துச் சென்றார்.
ஆடல் நாயகன் நடராஜ பெருமான் திருப்பாதங்களில் புத்தம் புதிய சலங்கையை வைத்து பூஜித்து கோவில் பிரகாரத்தில் மகளை மடியில் அமர வைத்து சலங்கையை தொட்டு வணங்கி மகளையும் அவ்வாறே செய்யச் சொல்லி அவள் கால்களில் சலங்கையை அணிவித்து விட்டார் விஜயகுமார்.
சலங்கை அணிந்து எதிரே இருந்த தில்லை அம்பலநாதன் சந்நிதி நோக்கி தனது வணக்கத்தை நடராஜருக்கு சமர்பித்தாள் அபூர்வா.
பச்சை பட்டில் தங்க ஜரிகை கூடிய வஸ்திரத்தை நாட்டிய உடை தைக்க தேர்ந்தெடுத்தார் விஜயகுமார்.
“மீனாக்ஷி தேவிக்கு உகந்தது மரகத பச்சை தான்” மகளை அணைத்து உச்சி முகர்ந்து விளக்கம் சொன்னார் தந்தை.
அன்றிலிருந்து அந்த சலங்கை என்றால் அபூர்வாவிற்கு பொக்கிஷம். எப்போதும் மேடை ஏறி நாட்டியம் ஆடும் போது தந்தையே சலங்கையை அணிவித்து விடுவது வழக்கம்.
“ஆல் தி பெஸ்ட் பூக்குட்டி” அபூர்வாவின் நெற்றியில் விஜயகுமார் முத்தமிட்டு வாழ்த்து சொன்னால் தான் அவளுக்கு நிறைவு.
அப்போது இருந்து தந்தை ஊரில் இல்லாத நாட்களில் எல்லாம் அவளுக்கு தந்தையின் பிரிவு அதிகம் வாட்டினால் நடனம் ஆடத் தொடங்கி விடுவாள். இரவில் அந்த சலங்கையைக் கட்டிப் பிடித்து உறங்கிப் போவாள்.
அவள் மேடை ஏறி ஆடிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜயகுமார் தில்லியில் இருந்தது தெய்வச் செயலா இல்லை தந்தை மகளின் ஆழ்மனதின் சக்தியினாலா...
அப்படி என்றால் இன்டநேஷனல் டான்ஸ் பெஸ்டிவல் இறுதி போட்டி அன்று எந்த வித சக்தியும் செயல்படாமல் போனது ஏன்... அப்படி சொல்லிவிட முடியாதே... அந்த ஷக்தி வேறு உருவ வடிவில் செயல் வடிவம் பெற்றதே...