தனிமையில் எதையோ சிந்தித்து கொண்டிருந்தவனின் குரலை கலைத்தது,"ச்சீப்!"என்ற மனோவின் குரல்!
"ம்??"
"விஷ்வாவை ஸ்கூல்ல சேர்க்க எல்லாம் தயாராயிடுச்சு!"
"ம்...விஷ்வா எங்கே??"
"அவன்..."
"எங்கே??"-மனோ பதிலளிக்காமல் நின்றான்.அவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு,எழுந்து தனதறையை விட்டு வெளியே வந்தான் ருத்ரா.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அவனது செவிகளில் அவன் ஆருயிர் புதல்வனின் சிரிப்பொலி கேட்டது.பல நாட்களுக்கு பின் செவியில் விழுந்த இசையமுதம்,உண்மையில் அவன் மனதை அடிவேர் வரை அசைத்து பார்த்தது.அவனது இதழ் தன்னிச்சையாக மலர,ஓசை வந்த திசை நோக்கி விரைந்தான்.அவனது கால்கள் குறித்த இடம் வந்ததும் தன்னிச்சையாக நின்றன.முகம் ஏற்ற புன்னகை காணாமல் மறைந்தது.அப்படி என்ன நிகழ்கிறது??
"சரி...சரி...அப்பறம் என்ன நடந்தது தெரியுமா?"-அச்சிறு மழலையோடு ஆர்வமாக உரையாடிக் கொண்டிருந்த பார்வதி,சிறிது தூரத்தில் இறுகிய முகத்தோடு தன்னை வெறித்துக் கொண்டிருந்தவனை கண்டதும் சட்டென அமைதியானாள்.அவனது கனல் கக்கும் பார்வை அவளை வெகுவாக சீண்ட,மெல்ல அடிகள் எடுத்து வைத்து முன்னேறினான் ருத்ரா.
"அப்பா!பாரு ஆன்ட்டி சூப்பரா கதை சொல்றாங்கப்பா!"-தந்தை பார்வையின் பொருள் உணரா,அச்சின்னஞ்சிறு தெய்வீகம்,மனதை பட்டதை பட்டென உரைத்தது.
"விஷ்வா!மனோ அங்கிள் உன்னை கூப்பிடுறார் பாரு!"
"ம்ஹூம்..!நான் கொஞ்ச நேரம் பாரு ஆன்ட்டி கூடவே இருக்கேன்பா!"-அவன் இதை எதிர்நோக்கவில்லை.
"சொல்றேன்ல போ!"-சற்றே கோபமாக அவன் கூற,முன்பு போல் சிலையாக நில்லாது,
"முடியாது!நான் கொஞ்ச நேரம் இங்கே தான் இருப்பேன்!"-என்று பதிலடி கொடுத்தான் விஷ்வா.
இது அவனுக்கு மற்றொரு அதிர்ச்சி!!
"உங்க பையன்!உங்க கோபத்துக்கு பதிலடி கொடுத்தாலோ,இல்லை மனசுவிட்டு அழுதாலோ அவன் சந்தோஷத்தை அனுபவிக்கிறான்!பூரணமா குணமாகுறான்னு அர்த்தம்!"-அன்று கீதா கூறியது நினைவில் உதிக்க,மாறுதலுக்காய்,அவன் விழிகள் கலங்கின ஆனந்தத்தில்!!
"விஷ்வா!அங்கிள்கிட்ட என்னன்னு கேட்டுட்டு வந்துடு!"-அமைதியாக எடுத்துரைத்தான் ருத்ரா.இப்போது அவன் மறுப்பேதும் கூறவில்லை.பார்வதியிடம் திரும்பி,
"இதோ வந்துடுறேன்!"-என்று கூறிவிட்டு ஓட்டம் பிடித்தான்.அவன் சென்றதம் உதவிக்கரம் ஏதுமின்றி நின்றவளின் முன் இறுகிய முகமாக நின்றான் ருத்ரா.
"உன்னை எதுக்காக இங்கே வர வைத்தேன்?"
"..............."
"சொல்லு!"-அவன் உரத்த குரலில் அதட்ட,ஒரு நொடி அவள் உடல் ஆடி அடங்கியது.
"அ..ஆபிஸ்....விஷயமா...சார்!"
"வந்த வேலையை மட்டும் பார்!என் பையன்கிட்ட பழகுற வேலையை வைத்துக்காதே!"-கடுமையாக எச்சரித்தவன்,கர்வத்தோடு திரும்பி நடந்தான்.பார்வதியின் கண்கள் நொடியில் கலங்கின.அவளால் அங்கு அழவும் முடியவில்லை.கண்ணீரை கட்டுப்பட்டால் வைக்கவும் இயலவில்லை.
"ச்சீப்!"
"ம்???"
"பயப்படுறீங்களா?"-மனோவின் வினா அவனை திகைக்க வைத்தது.
"வாட்?"
"எங்கே!உங்க பி.ஏ.வை விஷ்வாக்கூட அதிகமா பழகவிட்டால்,அவன் மனசு பழைய மாதிரி தாய்பாசத்துக்காக ஏங்க ஆரம்பித்துவிடும்னு பயப்படுறீங்களா?"-அவனிடம் கனத்த மௌனம்.
"நான் சொல்றேன்னு தப்பா நினைத்துக்காதீங்க ச்சீப்!நீங்க உங்க வாழ்க்கையில கடைசியா ஒரு பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்களேன்!விஷ்வாக்காக!அப்பறம் இதுக்காக எல்லாம் பயப்படவே தேவையில்லை!"
"மனோ உன் வேலையை மட்டும் பாரு!"
"ச்சீப்!நான் உங்களுக்கு கீழே வேலை செய்யுறவன் தான்!ஆனா,எனக்கு உங்க மேலே தனிப்பட்ட அக்கறை இருக்கு!விஷ்வா மேலேயும் தனிப்பட்ட பாசம் இருக்கு!நான் உங்களை பழைசை மறந்துட்டு எல்லோரையும் மன்னிக்க சொல்லலை.கடைசியா,ஒரே ஒரு உறவை மட்டும் உங்க பையனுக்காக உருவாக்க சொல்றேன்!"
"..............."
"நாளைக்கு விஷ்வாவை ஸ்கூல்ல சேர்க்கும் போது அம்மா பேர்ல சரண்யாங்கிற பேரை அவன் பார்த்தா,தேவையில்லாம அவன் கேள்வி கேட்பான்!ஒருவேளை,தாய் பாசம் அவனுக்கு மறுபடியும் கிடைத்தால்,அவன் தன் கடந்தகாலம் பற்றி யோசிக்கிற நேரம் நிச்சயம் குறைவா தான் இருக்கும்!"
"................."
"உங்க சுயநலத்துக்காக நீங்க அந்தப் பொண்ணை திட்டுறது நியாயமில்லை ச்சீப்!"-என்று அவன் கூறியதும் ருத்ராவின் இதயத்தில் ஏதோ ஒன்று சுருக்கென்று தைத்தது.