“நீ லாஸ்ட் பெர்பார்மன்ஸ் குடு. சோ உனக்கு டைம் இருக்கும்” எனவும் கடந்த சில மாதங்களாகவே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்த பாடலை அவளது இதழ்கள் முணுமுணுத்தன.
“வாவ் சூப்பர் சாங். இதுவே ஆடு” என்றாள் சைந்தவி.
வர்ஷினி ஆடும் தருணமும் வந்தது. பாடலிலும் அவளது நடனத்திலும் அரங்கமே லயித்திருந்தது.
“ஒரு மின்சாரப் பார்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டு கொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டு கொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்து விட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா .....”
இந்த வரிகள் ஒலிக்கும் போது அந்த அரங்கமே சற்று கூடதல் பிரகாசம் அடைந்தோ என்று எண்ணும்படி பாடலின் நாயகன் பிரசன்னமானான். வெள்ளையும் மரூன் நிறமும் கலந்த ஷெர்வானியில் கையில் ரோஜா பூங்கொத்து வைத்திருந்த கணேஷ் ராம் அங்கே அரங்க மேடையில் ஆடிக்கொண்டிருந்தவளைப் பார்த்து அப்படியே ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்.
“என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்” பாடல் ஒலிக்க தன்னை தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
“தாய்மொழி மறந்து போனது அவளா நானா” அவனுக்குள் பட்டிமன்றம்.
“வண்ணமெல்லாம் வாரி இரைத்த வர்ணஜாலம் இவளா
வானம் எங்கும் சிதறித் தெளித்த விண்மீனா
முழுமதி முகமோ முல்லைப்பூ சிரிப்போ
மயக்கும் அழகே என் இதயம் கவர்ந்தவளே
உன் கண் அசைவில் துடிக்கிறது எனது இதயம்
அடர்சிவப்பில் தங்கச் சரிகை இழையோடிய சேலை அணிந்த எழில் பாவையிடம்
சிக்கிக் கொண்டது என் மனம்”
அங்கே மனம் கவர்ந்தவளைக் கண்டதும் இவன் நெஞ்சுக்குள் மாமழை மனசெல்லாம் மல்லிகை. மருத்துவனை கவிஞன் ஆக்கினாள் கன்னிகை.
வர்ஷினியோ இது கனவா இல்லை நனவா என்று தெரியாமல் ஆடி முடித்திருந்தாள்.
மணப்பெண் ஜானவி ஓடி வந்து அவளைக் கட்டி கொள்ள சைந்தவி துள்ளி குதித்து தானும் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள். அங்கே இருந்தவர் அனைவரும் கைதட்டி பாராட்ட அதுவே இறுதி நடனம் ஆகையால் அவளை இளைஞர் பட்டாளாம் சூழ்ந்து கொண்டு பாராட்டு மழையில் நனைத்துக் கொண்டிருந்தனர்.
வர்ஷினியோ சுற்றும் முற்றும் கண்களை துழாவி தேடிக் கொண்டிருந்தாள்.
“என் கண் முன்னாடி தானே தெரிஞ்சார். அதுக்குள்ள எங்க மாயமா மறைஞ்சு போய்ட்டார். ஒரு வேளை அவரையே நினச்சுட்டு இருக்கதால என்னோட பிரம்மை போல” தான் ஆடும் போது தன் கண் முன் தெரிந்த தனது மனம் கவர்ந்த மன்னவனைக் காணாது தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.
“வர்ஷினி பப்பே ஸ்டார்ட் ஆகிருச்சு. வா” என்று அவள் கைபிடித்து அந்த கூட்டத்தில் இருந்து அவளை அழைத்துச் சென்றான் ஸ்ரீதர்.
“தாங்க்ஸ் டா ஸ்ரீதர். எல்லோரும் சுத்தி நின்னுடாங்க. ஜானு அக்கா சைந்தவி வேற காணாம போய்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியாம நின்னுட்டு இருந்தேன்”
“நீ இன்னிக்கு ரொம்ப நல்லா ஆடின. காலேஜ்ல எல்லாம் ஜாலி சாங் தானே ஆடுவ. இன்னிக்கு ரொம்ப வித்தியாசமா நேச்சுரலா இருந்துச்சு” ஸ்ரீதர் தனது தோழியை மனமார பாராட்டினான்.
“நானா ஆடினேன். என் இதயத்துக்குள்ள திருட்டுத்தனமா புகுந்த ஒரு திருடன் தானே என்ன ஆட வச்சான்” மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் அது உதட்டில் கள்ளப் புன்னகையாய் பிரதிபலித்தது.
பேசிக்கொண்டே உணவுப் பதார்தங்களை தட்டில் வைத்துக் கொண்டிருவர்களுடன் சைந்தவியும் வந்து சேர்ந்து கொண்டாள்.
“அந்தாக்ஷரி ஸ்டார்ட் ஆகிடும் இன்னும் கொஞ்ச நேரத்துல்ல. வர்ஷினி இருக்க கவலை என்ன. நாம தான் வின்” மிகுந்த மகிழ்ச்சியோடு சைந்தவி சொல்ல வர்ஷினி மெலிதாய் புன்னகை மட்டும் செய்தாள்.
அவ்வளவு நேரம் சலசலவென அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தவள் சட்டென அமைதியான நதியை போல ஆகிவிட்டிருந்தாள். அணை போட்டவன் யாரோ. ஆனால் இது சைந்தவியின் கவனத்தில் பதியவில்லை.
“வாங்க டேபிள் பார்த்து உட்காரலாம்” அவர்களை அழைத்துக் கொண்டு சைந்தவி நடக்க அதே நேரம் மாப்பிள்ளையின் தந்தை ஈஸ்வரமூர்த்தி ஜானவி சைந்தவி தந்தையிடம் கணேஷை அறிமுகம் செய்து கொண்டிருந்தார்.
“மீட் டாக்டர் கணேஷ் ராம். ப்ரில்லியன்ட் ஹார்ட் சர்ஜன். எனக்கு டாக்டர் தான் பைபாஸ் சர்ஜரி செய்தார். அண்ட் ஹி இஸ் மை கிளையன்ட் டூ” என அறிமுகம் செய்ய கணேஷ் ராம் ஒரு புன்னகையோடு வணக்கம் தெரிவித்தார்.