“உங்க பிசி ஷேடியுலிலே டைம் எடுத்து வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்” சைந்தவியின் அப்பா நன்றி தெரிவித்தார்.
“டாக்டர் நீங்களும் சீக்கிரமா கல்யாண சாப்பாடு போடணும்” ஈஸ்வரமூர்த்தி சொல்ல அதற்கும் புன்னகையையே பதிலாக தந்தான் கணேஷ்.
“யாரை அப்பாவும் அங்கிளும் இவ்வளவு புகழ்ந்துட்டு இருக்காங்க” அந்த பக்கமாக வந்த சைந்தவி வர்ஷினி ஸ்ரீதர் மூவரின் செவிகளிலும் இவர்களின் உரையாடல் விழ சைந்தவி கேள்வியை தொடுத்துக் கொண்டிருந்தாள்.
“தி கிரேட் டாக்டர் பார்க்கவும் ஹான்சமா இருக்கார்ல” சைந்தவி சொல்ல பார்த்தவிழி பார்த்திருக்க வர்ஷினி அசையாது நின்றாள்.
“இவர் டாக்டரா. என் அண்ணாவை போலவா. கணேஷ் ராம்ன்னு சொன்னாரே அந்த அங்கிள். ராம் ராம்” ஏற்கனவே முதல் இரண்டு சந்திப்புகளில் மனம் கவர்ந்து விட்டிருந்தவனிடம் இப்போது முழுமையாக சரணடைந்தாள்.
ராம் என்றே மௌன மொழியில் இவள் அழைத்தது அவனுக்கு கேட்காமல் போய்விடுமா என்ன. அதே நேரம் இவர்கள் பக்கம் திரும்பிய ராம் வர்ஷினியை இவ்வளவு அருகில் கண்டதும் திக்குமுக்காடிப் போனான்.
சைந்தவி தனது தந்தையிடமும் அக்காவின் மாமனாரிடமும் கையசைத்துவிட்டு வர்ஷினி மற்றும் ஸ்ரீதரை இழுத்துக் கொண்டு போக தன்னவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே வர்ஷினி அங்கிருந்து செல்ல ராமின் இதயம் “அர்ஷு என் அர்ஷும்மா” என உருப்போட்டது.
ஈஸ்வரமூர்த்தி விடைபெற்று சென்றது எதுவுமே அவனது கவனத்தில் பதியவில்லை. அப்போது தான் அவனுக்கு உரைத்தது. இவள் யாரென்னு தெரிந்து கொள்ளவில்லையே என்று.
ஆனால் யாரிடம் போய் கேட்பது. அன்று நயாகரா பால்ஸில் அந்த பையனோடு தான் வந்திருந்தாள். இங்கும் அவன் இருக்கிறான். நட்பா உறவா என்று தெரியவில்லை. இருப்பினும் ஒரு பெண்ணை பற்றி யாரிடம் என்னவென்று விசாரித்து தெரிந்து கொள்ள என்று கணேஷ் ராம் மிகுந்த குழப்பம் அடைந்தான்.
அதே நேரம் அங்கே மைக்கில் சைந்தவி அனைவரையும் அந்தாக்ஷரிக்கு அழைத்துக் கொண்டிருந்தாள். ஓர் ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ் ராம்.
“டாக்டர் வாங்க ஜாயின் அஸ்” ஈஸ்வரமூர்த்தி அழைக்க மறுத்து கையில் காபி கோப்பையோடு அங்கே சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டான்.
பெண் வீட்டினர் ஒரு புறம் மாப்பிள்ளை வீட்டினர் ஒரு புறம் என்று சேர் போட்டு அமர்ந்திருந்தனர். அதில் பெண் வீட்டு பக்கத்தில் நடுநாயகமாக வர்ஷினி தான் அமர்ந்திருந்தாள்.
அந்த ஹாலைச் சுற்றி நேர் பார்வை, ஓரப் பார்வை, ஒற்றைப் பார்வை என எல்லா பார்வையாலும் துழாவினாள்.
“கள்ளி என்னை தான் தேடுறாளா” கணேஷ் ராமின் மனதில் பூச்சாரல், பனித்தூறல்.
பாட்டுக்கு பாட்டு களை காட்ட இரண்டு பக்கமும் சரிசமமாக போய் கொண்டிருந்தது. வர்ஷினியின் கண்கள் அப்போதும் தேடலை விடவில்லை. அதைக் கண்டு சிரித்துக் கொண்டான் அவள் நாயகன்.
அப்போது மாப்பிள்ளை பக்கத்தில் சீட்டு எடுக்க அதில் “ஜானம்” என்ற சொல் வர அதில் தொடங்கும் பாடலை யோசித்துக் கொண்டிருந்தனர்.
ஏனோ நிறைய பாடல்கள் இருந்தும் சட்டென்று யாருக்கும் நினைவு வரவில்லை போலும். உற்சாகமான சைந்தவி 5 , 4, 3, 2 என கவுன்ட் டவுன் கொடுக்க அவள் ஒன்று என்று சொல்லும் முன் காற்றில் ஓர் இனிய குரல் தவழ்ந்து வந்து வர்ஷினியின் காதுகளில் பாய அது சொன்ன செய்தியில் வர்ஷினியின் கண்கள் பளிச்சிட்டன.
“JANAM DHEK LO MIT GAYI DHOORIYAAN MEIN YAHAAN HOON YAHAAN HOON YAHAAN HOON YAHAAN”
(அன்பே பார் தூரங்கள் தொலைந்து போய்விட்டன. இருக்கிறேன் நான் இதோ இங்கே இதோ இங்கே)
பாடலை பாடியது யார் என்று தெரிந்து கொள்ள அனைவரும் திரும்பி பார்க்க அத்தனை நேரம் தேடிக் கொண்டிருந்த அவளது விழிகள் இப்போது நிமிர்ந்து பார்க்க திராணி இன்றி இமை கவிழ்ந்தன.
இதயம் துடிக்கும்
{kunena_discuss:1109}