குட்டிக் கதைகள் – 81. மயிலின் பெருமை!
ஒரு காட்டில் ஒரு மயில் இருந்தது. அதற்கு தன் வண்ணமயமான இறகுகளின் மேலே அப்படி ஒரு பெருமை!!
ஒரு நாள் மயில் ஒரு கொக்கை சந்தித்தது. கொக்கின் மந்தமான நிறம் மயிலுக்குப் பிடிக்கவில்லை!
"நான் சொல்கிறேன் என்று தவறாக நினைத்துக் கொள்ளாதே. உன் இறகுகள் ரொம்பவும் மந்தமாக இருக்கிறது. என் இறகுகளைப் பார்! எத்தனை அழகாக இருக்கிறது! எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது! என் நிறங்களைப் பார், எப்படி கண்ணை கவருகிறது,” என்று விடாமல் தன் பெருமையை பீற்றியது மயில்.
அத்துடன் நிற்காமல், தன் தோகையை விரித்துக் காட்டி பெருமை கொண்டது!
பொறுமையுடன் அமைதியாக இருந்த கொக்கு, மயிலின் பெருமை பீற்றல் தொடர்ந்துக் கொண்டே செல்லவும்,
"சரி, நீ அழகு தான். நான் ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு அழகு இருந்து என்ன பிரயோஜனம்? என்னால் என் சிறகுகளை பயன்படுத்தி உயரமாக வானத்தில் பறக்க முடியும். உன்னால் அது முடியுமா???” என்றுக் கேட்டுக் கொண்டே சிறகை விரித்து வானத்தில் பறந்து விட்டு, மீண்டும் கீழே வந்தது!
“மயிலே, உன்னால் முடிந்தது எல்லாம் இப்படி தரையில் நின்று கர்வத்துடன் பேசுவது மட்டும் தான்! பறக்க முடியாத இந்த அழகான இறகுகளால் என்ன பிரயோஜனம்” என்று சொல்லி விட்டு பறந்துச் சென்றது கொக்கு!
மயில் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து நின்றது!
கருத்து:
அழகை விட எதற்கு பயன்படுகிறது என்பதில் தான் எதற்குமே மதிப்பும், முக்கியத்துவமும் கணக்கிடப் பெறுகிறது!