பத்மாவதி துக்கமும்,வருத்தமுமாய் பாண்டுரங்கன் மீது ஆணை..நீங்கள் என்னை அடித்தல் கூடாது..என்னைத் தொடுதலும் கூடாது எனச் சப்தமிட்டாள்.
ஓங்கிய கையை அப்படியே கீழே தணித்தார் கும்பார்.அன்று முதல் மனைவி தொட்ட எதனையும் தொடுவதில்லை.ஏன் மனைவியையே தீண்டுவதில்லை என சபதம் எடுத்தார்.நாட்கள் நகர்ந்தன.
கும்பார் தனியாக தானே சமைத்து உண்ண ஆரம்பித்தார்.மனைவி கையால் உண்பதில்லை.
மனைவி பத்மாவதிக்கு தாங்கமுடியாத வருத்தம் கணவரின் செயல் கண்டு.மகனை இழந்த வேகத்தில் தான் சொன்ன வார்த்தைகளால் மனம் வருந்தி தன் கணவன் தன்னைவிட்டு விலகுவதாக எண்ணினார் பத்மாவதி.என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள்.பற்றற்று வாழும் கணவனைக்கண்டு வருந்திய அவர் தன் தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறி தன் கணவர் இப்படி இருந்தால் வம்சத்திற்கு வாரிசு இல்லாமல் போகும்.எனவே தன் தங்கையைத் தன் கணவருக்கு இரண்டாம் தாரமாய் மணம் முடித்துத் தர வேண்டினார்.தன்னை விலக்கியது போல் தன் தங்கையை விலக்க மாட்டார் தன் கணவர் என நம்பினார் பத்மாவதி. தந்தையும் தங்கையும் சம்மதிக்கவே பத்மாவதியின் தந்தை கும்பாரைக் கண்டு இது பற்றிப் பேச கும்பார் மறுத்துவிட்டார்.
கடைசியாய் ஊராரின் வற்புறுத்தலும் சேரவே சம்மதித்தார் கும்பார்.திருமணம் முடிந்தது.
உடனேயே ஊருக்குக் கிளம்பிவிட்டார் கும்பார் மாமனார் ஊரிலிருந்து..அப்படிக்கிளம்பும்போது
கும்பாரின் மாமனார்..மாப்பிள்ளை அவர்களே..என் இரு மகள்களையும் நீங்கள் சமமாக நடத்த வேண்டும் என மகள்களிடம் பாசம் கொண்ட ஒரு தந்தைக்கே உரிய பாசத்தோடு கூற அப்படியே செய்கிறேன் என உறுதியளித்தார் கும்பார்.
புது மனைவியோடு ஊர் திரும்பிய கும்பார் தனது இரண்டாவது மனைவியையும் தீண்டவில்லை.
அக்கா பத்மாவதியிடம் சண்டை போட ஆரம்பித்தாள் தங்கை..இப்படிப்பட்டவரை ஏன் தனக்கு மணம் முடித்துவைத்தாய் என்று.பத்மாவதி தன் தங்கையிடமும் கணவர் இப்படி ஏன் நடந்து கொள்கிறார் எனப் புரியாமல் தவித்தார்.
ஆனால் கும்பாரின் மனமோ தன் மாமனார் தன்னிடம் இரு பெண்களையும் சமமாக நடத்தும்படி கேட்டுக் கொண்டதும் அதற்குத் தான் உறுதியளித்ததும் அதன் படி எப்படி முதல் மனைவி தொட்டவற்றைத் தொடுவதில்லையோ எப்படி அவரைத் தீண்டுவதுமில்லையோ அப்படியே இரண்டாம் மனைவியிடமும் நடந்து கொண்டால்தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாகும் என எண்ணி இளைய மனைவியையும் தீண்டுவதில்லை.
அக்காவுக்கும் தங்கைக்கும் சண்டை தீவிரமாயிற்று.பிறகு சமாதானம் ஆகி ஒரு முடிவுக்கு வந்தனர்.
அன்று இரவு.பாண்டுரங்கனைப் பாடி முடித்துவிட்டுப் படுத்தார் கும்பார்.கொஞ்சம் கண்ணயர்ந்தார்.
இரு மனைவிகளும் அவரின் இரு பக்கமும் படுத்தனர்.இது கும்பாருக்குத் தெரியாது.இருவரும் கணவரின் இரு கைகளையும் ஆளுக்கொரு பக்கமாக தங்கள் பக்கமாக இழுத்தனர்.
சட்டென முழிப்பு வந்தது கும்பாருக்கு பாண்டுரங்கன் மீது ஆணையிட்டு.மனைவிகளைத் தீண்டுவதில்லை என்ற உறுதியோடு இருந்த கும்பாருக்கு அவர்கள் இருவரும் தன் பக்கத்தில் படுத்து தம்மைத் தீண்டுவதைக் கண்டதும் திடுக்குற்று அவர்கள் இருவரையும் உதறித்தள்ளினார்.இருவரும் தீண்டிய தம் இரு கரங்களையும் வீச்சரிவாளால் வெட்டி எறிந்தார்.
மனைவிகள் இருவரும் கதறி அழுதனர்.தவறு செய்துவிட்டோமென புலம்பினர்.
அப்போது காசிக்குச் சென்றிருந்த கும்பாரின் தம்பி எற்றண்னா திரும்பி வந்து வாயிற்கதவைத்தட்டினார்.கதவு திறக்கப்பட்டதும் உள்ளே வந்தவர் அண்ணண் இரு கைகளையும் இழந்த நிலையில் நிற்பதையும் அண்ணிமார்கள் கதறிக்கொண்டிருப்பதையும் கண்டு விபரம் அறிந்து மனம் வருந்தினார்.
அண்ணன் கும்பாரின் கைகளை மீண்டும் எடுத்துப் பொருத்தி சிகிச்சை அளித்தார்.சிறிது நாட்களில் கைகள் கூடின.ஆனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை.மண்பாண்டமும் செய்தல் முடியவில்லை.எற்றண்ணாவே மண்பாண்டங்கள் செய்து விற்று பொருளீட்டி குடுபத்தைக் கவனித்தார்.
நாட்கள் நகர்ந்தன.பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனுக்குத் திருவிழா ஆரம்பித்தது.பக்தர்கள் கூட்டம் பண்டரிபுரத்தில் வெள்ளமெனக் கூடியது.நாமதேவர் எனும் விட்டலனின் பக்தர் பண்டரினாதனின் கோயிலுக்கு வந்தார்.நாமதேவர் பஜனைப் பாடல்களை இயற்றிப் பாடுவதில் வல்லவர்.அக்காலகட்டத்தில் அவர் பெரும் புகழ் பெற்றிருந்தார்.அவருக்கு பண்டரினாதனின் கோயில் தெய்வீகமற்றுக் களையிழந்து சோபையற்று இருப்பது போலும் அக்கோயிலில் பண்டரினாதன் இல்லாதது போலும் தோன்றியது.அதனால் வருத்தமுற்று பண்டரினாதா..நீ இங்கில்லையே?எங்கே சென்றாய்?எனக் கேட்பது போல் பாடல் ஒன்றை இயற்றிப் பாடினார்.