அன்றிரவு அவர் கனவில் தோன்றிய விட்டலன் தான் கோராகும்பாரின் இல்லத்தில் எற்றண்ணாவாக இருந்து பொருளீட்டி கும்பாரின் குடும்பத்தைக் காத்து வருவதாகச் சொன்னார்.
அவ்வளவுதான் கிளபிம்விட்டார் நாமதேவர் கும்பார் இல்லம் நோக்கி.அங்கே பாண்டுரங்கன் எற்றண்ணாவாக உருவம் கொண்டு கடுமையாய் உழைத்து தன் பக்தன் கும்பாரின் குடும்பத்தைக் காப்பாற்றி வருவதைக் கண்டார்.ஆம் கங்கைக்குச் சென்ற ஏற்றண்ணா திரும்பி வரவில்லை.ஆனால் அங்கு வந்திருப்பதோ பாண்டுரங்கன்.தன் பக்தன் கைகளை இழந்த நிலையில் மண்பாண்டம் தயாரிக்க முடியாத நிலையில் அக்குடும்பம் வறுமையில் வாட விடுவானா என்ன பாண்டுரங்கன்.?ஏற்றண்ணா உருவத்தில் வந்து மண்பாண்டம் செய்து விற்றுப் பொருளீட்டிக் காப்பாற்றுவது அவனல்லவா?
நாமதேவருக்கு உள்ளம் கசிந்தது.கும்பாரின் பக்தியை எண்ணி வியந்தார் நாமதேவர்.எப்பேற்பட்ட பக்தியாய் இருந்தால் பாண்டுரங்கனே வந்திருந்து குயவர் வேலை செய்து அவரின் குடும்பத்தைக் காப்பாற்றுவார் என என்ணி எண்ணி வியந்தார்.
நாமதேவர் கும்பாரையும் அவரது இரு மனைவிகளையும் எற்றண்ணா உருவில் இருந்த பாண்டுரங்கனையும் அழைத்துக் கொண்டு பண்டரிபுரம் வந்தார்.பாண்டுரங்கன் இருந்தால்தானே திருவிழா நடக்கும்?
நாமதேவர்,கும்பார்,மற்றும் கும்பாரின் இரு மனைவிகளும் கோயிலில் அமர்ந்திருக்க எற்றண்ணா உருவில் இருந்த பாண்டுரங்கன் கருவறைக்குள் சென்று மறைந்துவிட்டார்.
நாமதேவர் புரிந்து கொண்டார்.அப்போது பஜனை கோஷ்டி ஒன்று கோயிலுக்குள் நுழைந்தது.
பாண்டுரங்கனைக் குறித்துப் பஜனை செய்ய ஆரம்பித்தனர் அந்த கோஷ்டியினர்.தாளம் போட்டபடியும்,கைகளைத் தட்டிக்கொண்டும் தம்மை மறந்து பஜனை செய்யும் அவர்களைப் பார்த்து கோராக்கும்பாருக்கு தாமும் அதுபோலக் கைகளைத் தட்டித் தட்டிப் பாட முடியவில்லையே என மிகுந்த வருத்தத்தோடு வெட்டுப்பட்டதால் கோணல்மாணலாக வளைந்து போனத் தமது கரங்களைப் பார்த்தார்.பாண்டுரங்கா..பாண்டுரங்கா என விம்மினார்.அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.அப்போது ஒரு அதிசயம் நடந்தது.ஆம் வெட்டுப்பட்டதால் வளைந்துபோன அவரது கரங்கள் சட்டென நேராயின.அவரால் கைகளை நன்றாக இயக்க முடிந்தது.பாண்டுரங்கா..பாண்டுரங்கா..பண்டரினாதா..பண்டரினாதா..விட்டல்..விட்டல்..ஜே..ஜே..விட்டல்..என உணர்ச்சி மிகுதியால் கத்தினார்.அங்கிருந்த அனைவரும் இவ்வதிசயத்தைப் பார்த்து பாண்டுரங்கா..பாண்டுரங்கா.. என கோஷமிட்டனர்.கும்பாரின் மனைவிகள் இருவருக்கும் தாங்கமுடியாத மகிழ்ச்சி.பாண்டுரங்கனின் சன்னதியில் விழுந்து வணங்கினர்.அப்போது பத்மாவதி பாண்டுரங்கா..விட்டலா...உன் கருணையே கருணை...என் கணவருக்கு அவர் இழந்த கரங்களைச் சரியாக்கி அற்புதம் நடத்திவிட்டாய்.அதுபோலவே இறந்த என் குழந்தையையும் உயிரோடு திருப்பித் தருவாயா?எனக் கதறியழுதார்.கேட்பவருக்குக் கேட்டதைத் தருபவனல்லவா பண்டரினாத விட்டலன்.தன்னையே நம்பியிருக்கும் பக்ததையைக் கைவிடுவானா என்ன?
அவன் மனது வைத்தால் எதுதான் நடக்காது?பாண்டுரங்கனின் சன்னிதானத்திலிருந்து குழந்தை ஒன்றின் அழு குரல் கேட்டது.அழுது கொண்டே அக்குழந்தை தவழ்ந்தபடி வெளியே வந்தது.
அக்குழந்தை..அக்குழந்தை..பத்மாவதியின் குழந்தை.ஆம் சேற்றில் தந்தையால் மிதிபட்டு இறந்த அதே குழந்தைதான் உயிரோடு வெளியே வந்தது.எல்லாம் பாண்டுரங்கனின் மகிமைதான்.
ஓடிச்சென்று குழந்தையை அள்ளியெடுத்த பத்மாவதி பாண்டுரங்கா...பண்டரீனாதா..விட்டலா என்று பக்தி மேலிட கத்தியபோது அனைவரின் மனமும் பாண்டுரங்கனின் கருணை கண்டு வியந்தது.
நாமதேவரின் கண்கள் கசிந்தன.அங்கே கும்பாரும், நாமதேவரும், பஜனை கோஷ்டியினரும் மிகுந்த ஆரவாரத்தோடு பாண்டுரங்கனின் கருணை,புகழ் அனைத்தையும் பாடிப் பாடி செய்த பஜனையால் அவ்விடத்தில் பக்தி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
வாருங்களேன் நாமும் சொல்வோம்..ஜே..ஜே விட்டல்..ஜேஜே விட்டல்...பாண்டுரங்கா.... பண்டரினாதா......
அவனை நம்புங்கள்....அவன் தருவான் அனைத்தையும்....