சிறந்த நடிகை விருது! - புவனேஸ்வரி
எழுதி எழுதி கசக்கி போட்ட கிறுக்கல்களாய்
எனக்குள் உன் நினைவுகள்!
அன்புடன் என்று கையொப்பமிட்டு நீ சென்றிட
காலியான காகிதத்தில் தனித்து நான் மட்டும் காவியம் எழுவதோ?
எத்தனை நாட்களாய் கனவு கண்டாய்
என்னை இந்நிலையில் வைப்பதற்கு!
என் ஸ்வாசத்திற்கு வழி செய்யாமல்
கண்ணாடி பேழையில் அமர்த்திவிட்டாய்!
வாழ்க்கை எனும் பொருட்காட்சியில்
சிரித்து கொண்டிருக்கும் பொம்மை நான் !
அந்தோ பரிதாபம் !
என் சிரிப்பைக் கண்டுகூட பொறாமை படுகிறது சில கூட்டம்!
எப்படி வாய்மொழிவேன் புன்னகையெல்லாம் புதிரென?
சிரிப்பெல்லாம் பொய் சித்திரமென?
உயிரான நீ எங்கோ உலாவி கொண்டிருக்க
உடலிங்கே இயந்திரமானது !
மழைத்துளியோ தேகத்தை எரிக்கிறது!
சூரியக் கதிர்களோ ஒத்தடம் கொடுக்குகிறது!
காற்று வந்து முகம் தீண்டினால்
பிடிக்காத ஒருவன் வற்புறுத்தி இதழில் முத்தமிட்டதுபோல
கூனி குறுகி போகிறேன்!
மலர்களெல்லாம் சிரிக்கும்போது,
நான் பரிகாசிக்கப்படுவதாய் உணர்கிறேன்!
எந்த வண்ணத்தில் உடை அணிந்தாலும்,
அது துக்கத்தின் அடையாளம் ஆகிட,
தூக்கத்தின் அடையாளத்தை மறந்து
கருமையாகின இருவிழிகள்!
சுவைகள் ஆறாம்!
உன்னை பிரிந்தப்பின் ஆறில்
ஒரு சுவைக்கூட புலப்படவில்லையே!
மகிழ்ச்சி என்பது விமர்சனங்களிலிருந்து
தப்பிக்க பூசிடும் அரிதாரம் ஆகிவிட்டது!
இன்னும் எத்தனை தினங்கள்
நான் உயிர் வாழ்வதாய் என்னையே ஏமாற்றிக் கொள்வது?
நேசித்ததற்கு பலனாகவா நீ என்னை இப்படி கொல்வது?
இம்முறை சிறந்த நடிப்பிற்கான விருதை எனக்கு கொடுக்க சொல் !
அதை சமர்ப்பிக்கவாவது நீ என்முன் தோன்றினால் மகிழ்ச்சித்தான் !
{kunena_discuss:779}