Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 29 - நா. பார்த்தசாரதி
"கோவில் வழிபாடு - முதலிய பல உடனடியான பொது நன்மை சம்பந்தப்பட்ட அவசர விஷயங்கள் தீர்ப்பைப் பொறுத்துக் காத்திருப்பதால் ஒரு வாரம் என்பது மிகவும் அதிகமான காலதாமதமாக இருக்குமோ?" என்று கருத்துத் தெரிவித்தார் எதிர்த்தரப்பு வக்கீல். அவருடைய கோரிக்கைக்குப் பின் அடுத்த மூன்றாவது நாளே தீர்ப்புக் கூறுவதாக அறிவித்தார் நீதிபதி.
அன்று அவ்வளவில் கோர்ட்டு கலைந்தது. கோர்ட் வாசலில் கூடி நின்று கொண்டிருந்த அர்ச்சகர்கள் வேணு மாமா வெளியே வந்ததும், அவரருகே வந்து சூழ்ந்து கொண்டனர்.
"என்ன சுவாமீ! ஏதோ நம்பிக்கையிலே உம்ம கிட்டத் தனியாச் சொன்னதைப் பதிவு பண்ணிக் கோர்ட்டிலேயே போட்டுக் காட்டி மானத்தை வாங்கிட்டேளே? இப்படிப் பண்ணலாமா நீங்க?" - என்று கைலாசநாதக் குருக்கள் அவரிடம் பரிதாபமான குரலில் கேட்டார்.
"பொய் சொல்றவாளை எங்கே வேணுமானாலும் எப்பிடி வேணுமானாலும் மானத்தை வாங்கலாம் சுவாமி! அதுலே தப்பே இல்லே" - என்று தாட்சண்யமே இல்லாமல் கடுமையாக அவருக்குப் பதில் சொன்னார் வேணு மாமா. அர்ச்சகர்கள் அந்தக் கடுமையைத் தாங்கமுடியாமல் அவரை விட்டு விலகிச் சென்றனர்.
"பொய் சொல்றவாளுக்கு அவா சொந்த வாயும் நாக்கும் கூட ஒத்துழைக்காது. அந்த வாட்ச்மேன் கமலி புரியாத பாஷையில் பேசினாள்னு முதல்லே சொல்லிட்டு அப்புறம் தடுமாறிப் போய்த் தமிழிலேதான் பேசினாள்னு உளறினான் பாருங்கோ. பஜனை மடம் பத்மநாப ஐயரும் மத்தவாளும் என்னையும் கமலியையும் ரதி மனமதச் சிற்பத்தின் கீழே ஆபாசமான நிலையிலே பார்த்ததாகப் புளுகிட்டு ரதி மன்மத சிற்பம் இரண்டாவது பிரகாரத்திலே இருக்குன்னு சாதிச்சானே? பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமோ? நேத்து விசாரணையோடு விட்டிருந்தாலும் பரவாயில்லே இன்னிக்கு அவா வக்கீல் தயார்ப் பண்ணிக் கொண்டு வந்துவிட்ட அத்தனை சாட்சிகளும் நன்னா அசடு வழிஞ்சுட்டா" - என்றான் ரவி.
"அது மட்டுமில்லேடா! கடவுள் மேலே ஆணையா நெஜம் பேசறோம்னு பிரமாணம் பண்ணிட்டுப் பொய் புளுகின இந்தப் பக்த சிகாமணிகளைவிட மனசாட்சி மேலே ஆணையா நெஜம் பேசறே'ன்னு உள்ளதை உள்ளபடியே சொன்ன அந்த நாஸ்திகன் எத்தனையோ