யமுனாவுக்குப் பேசும் உற்சாகமோ, கலகலப்போ இல்லை.
மலைப்பாதையில் உய் உய்யென்று பஸ் ஏறுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் இங்கே அமைக்கப் பெற்றிருக்கும் நீர் மின் நிலையங்களுக்காகப் போட்ட சாலை; இந்த இருண்ட மலைக் கானகங்களில் புத்தொளியும் புதிய நாகரிக மலர்ச்சியும் வந்துவிட்டதன் அடையாளமாக இந்தப் பஸ் குதிரைப் பந்தயத் திருவிழாவுக்கும் மக்களைச் சுமந்து கொண்டு மலையேறுகிறது. வனவிலங்குகளின் இருப்பிடமாகத் திகழ்ந்த இருண்ட கானகங்கள் இன்று கரைந்து விட்டன. தன்னிச்சையாகக் குதித்துச் செல்லும் அருவிகள் இன்று மறைந்து விட்டன. மலைச்சரிவெங்கும் பச்சைக் குவியல்களாகத் தெரியும் தேயிலைச் செடிகளினூடே கரைந்த கானகங்களினூடே கோபுரந்தாங்கிகளில் வீரிய மிக்க மின்வடங்கள் செல்கின்றன. நீர்த்தேக்கங்களை ஒட்டிச் செயற்கைப் பூங்காக்கள். அவற்றை ஒட்டிய சுற்றுலா விடுதிகள்; வாயில் விடுதிகள்; வாயில்களில் நீண்ட படகு போன்று பளபளக்கும் ஊர்திகள். சில நீர்த்தேக்கங்களில் அலங்காரப் படகுகளும் வைத்திருக்கிறார்கள். ஆனால் நீரில்லையே! புற்சரிவுகளில் உல்லாசம் விரும்பி வருபவர்களுக்காக மட்டக் குதிரைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கும் ஏழைகளுக்கொப்ப அணைத் தேக்கம் காட்சியளிக்கிறது.
ஏழைமை கொடியது. வயிற்றுக்கில்லாத ஏழைமை மட்டுமல்ல; 'இந்த முக்கல் முனகல் பஸ்ஸில் இடித்து நெருக்க, வயிற்றுக்குடல் சுருண்டு வாயில் வந்து விடுவது போல் புரட்ட, இப்படிப் போக வேண்டியிருக்கிறதே; அந்தப் படகுக் காரில் போக வழியில்லையே' என்ற ஏக்கத்தைத் தோற்றுவிக்கும் உணர்ச்சியும் ஏழைமையிலிருந்து பிறப்பது தான். அதை எப்படியேனும் வெற்றி கொள்ள வேண்டும் என்று தான் கஞ்சிக்குத் தானியம் வாங்க வைத்திருக்கும் கைப்பொருளையும் 'ஜாக்பாட்'டில் கொண்டு கொட்டுகிறார்கள்.
வெளியிலிருந்து சில்லென்று காற்று முகத்தில் வந்து படிகிறது.
மேலே மழை பெய்யுமோ?
சில வளைவுகள் ஏறுமுன்பே சாரல் பெருந்துளிகளாய் பஸ்ஸைத் தாக்குகிறது. பரபரவென்று பஸ்ஸின் திரைச் சீலைகளை இழுத்து மாட்ட ஒரு சிறு போராட்டம் நிகழ்த்த