Flexi Classics தொடர்கதை - வேருக்கு நீர் - 02 - ராஜம் கிருஷ்ணன்
ஜோசஃப் முன்னதாகவே வந்து பஸ் நிற்குமிடத்தில் அவர்களுக்காகக் காத்து நிற்கிறார். முடியில் பாதிக்குப் பாதியாய் வெண்ணிற இழைகள் அடர்த்தியான கிராப்பில் பங்கு கொண்டிருக்கின்றன. சிறிய ஹிட்லர் மீசை கருப்பாகவே இருக்கிறது. விழிகளின் கூர்மை மூக்குக் கண்ணாடியிலும் தெரிகிறது. அந்த நாட்களில் ஜயப்பிரகாஷ் அச்சுத பட்டவர்த்தன் கோஷ்டியில் இருந்தவர் ஜோசஃப். ஜயப்பிரகாஷ் தீவிர அரசியலை உதறிச் சர்வோதயத் தொண்டுக்கு வழிகாட்டிய போது, ஜோசஃப் ராம்ஜியின் சேவாசிரமத்தில் பங்கு பெற வந்தார். அப்போது இந்த ஆசிரமம் கூடலூர்ப் பக்கம் அமைந்த இயற்கை வைத்திய இல்லமாகத் தானிருந்தது.
யமுனா சிறு வயசுக் குழந்தையாக அவருடைய தோளிலும் மடியிலும் முதுகிலும் ஏறி விளையாடியவள். பின்னர் அவள் கோவை நகரில் படிக்கச் சென்று விடுதியில் இருந்த நாட்களில் காந்திய நெறிமுறைகளுடன் இயங்கிய அந்தப் பள்ளி விடுதியில் இவளைப் பார்க்க அடிக்கடி இந்த அம்மாவன் தாம் வருவார். குடைப்போன்று அமைக்கப் பெற்ற அந்தப் பார்வையாளர் கொட்டகையில், கதர்ச் சட்டையும் கையில்லா உட்கோட்டும் மூக்குக் கண்ணாடிக்குள் அன்பு தவழும் விழிகளுமாக நிற்பார். "எந்தா? குட்டிக்கு எந்து வேணும்?" என்று கேட்டவண்ணம் மடியிலிருந்து இரகசியமாக ஒரு பொட்டலத்தை எடுத்து அவள் கைகளில் வைப்பார்.
அதில் எண்ணி இருபது நேந்திரங்காய் வறுவல் வில்லைகள் இருக்கும். ஆசிரமம் போன்ற அந்த விடுதியில் வறுவல் பொரியல் போன்ற தீனிகள் செய்யமாட்டார்கள். ஜோசஃப் கோவைக்கு வரும்போது நூறுகிராம் வறுவலை வாங்கிக் கொரித்துக் கொண்டு, ஊர் முழுவதும் சுற்றுவார். அதில் அவளுக்கு இருபது துண்டுகள், தங்கமொகரக்கனைப் போல் பங்கு கொண்டு வருவார்.
அன்று போல் இன்றும் ஜோசஃப் அம்மாவன் நிற்கிறார். அந்த வெயிஸ்ட் கோட், கதர் ஜிப்பா, வேஷ்டி...
"அம்மாவன் நேந்திரங்கா வறுவல் கொண்டு வந்திருக்கிறாரோ?" என்று சிரித்துக் கொண்டே யமுனா இறங்குகிறாள், முகம் ரோஜா மலராக மாறி இருக்கிறது.