"அம்மா வரலே? ஏம்மா, அப்பாவைக் கூட மெள்ள வண்டியில் சாய்த்தாற் போல் வச்சுக் கூட்டி வரக் கூடாதா?"
"வரலாம். அவருக்கு வரவேணுமின்கிற ஆர்வமே இல்லாமப் போயிட்டுதே! அம்மாவை அவர் போகச் சொன்னார். ஆனால், அம்மா அப்படி வரமாட்டாளே?"
"எனக்கு ஊருக்குப் போகுமுன்ன அங்கே வரணும்னு. காரைப் பையன் எடுத்திட்டுப் போயிடறான்."
கமலம்மா இதைக் கூறும் போது குரல் தழுதழுப்பது தெரியாமல் மறைத்துக் கொள்கிறாள். ஆனால் பயனளிக்கவில்லை.
"நீ வாம்மா; நாடகம் முடிஞ்சி நான் காத்திருப்பேன்!"
தொண்டையில் சொல் இடறி விழுவதைப் போலிருக்கிறது.
ஜோசஃப் கூட்டத்தை வரவேற்று, காந்தியடிகள் தம் வாழ்க்கையின் வாயிலாக விளக்கிய லட்சியங்களைப் பற்றிச் சொல்ல முயலுவதே இந்தக் கலை நிகழ்ச்சிகளின் நோக்கம் என்று எடுத்துரைக்கிறார். அன்பாலும், அருளாலும் சிறுமைகளை ஒழிக்கப் பாடுபடுவதே இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் பொருள். பாரத நாட்டின் பண்பாடாய் வந்த அஹிம்சையும் சத்திய நெறியும் நைந்து, வன்முறையிலும் ரத்தப் புரட்சியிலும் இளம் சமுதாயம் நம்பிக்கை வைக்கும் அபாயத்தை உணர்ந்து, அதைப் போக்கும் வழிகாண இந்த நூற்றாண்டைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துகிறார்.
யமுனா அரங்கத்து மூலையில் அவரைப் பார்த்துக் கொண்டு சிந்தனை ஓட்டமே நிலைத்து விட்டாற் போல் நிற்கிறாள். உற்சாகக் கலகலப்பை எல்லாம் எங்கோ மலை முகட்டில் மிதந்து வரும் கரிய நிழல் அழித்து விடுவதைப் போல் ஒரு பிரமை.
பாரததேவி மேடையில் தோன்றுகிறாள். அவள் தம் புதல்வர் புதல்வியர் அவள் முன் சத்தியப் பிரதிக்ஞை எடுத்துக் கொள்கின்றனர். வள்ளுவர் தம் குறளில் காந்தியத்தைக் காட்டுகிறார்.