Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 09 - சு. சமுத்திரம்
மிஸ்டர் ரமணன் வீட்டு மொட்டை மாடி பொங்கி வழிந்தது. வீட்டிற்குக் கீழே, புல்வெளி இல்லாத தரைவெளியில் மாருதிகளும், அம்பாஸிடர்களும், இடைஇடையே ஸ்கூட்டர்களும் அங்கே தரையே இல்லாதது போல் வியாபித்து நின்றன. இடம் போதாமல் சாலையில் கூட ஒரே வாகனக் குவியல், பாமா, சமையல் அறையில் கேசரி கிண்டிக் கொண்டிருக்கும் சமையல்காரர்களை கண்களால் கிளறிவிட்டுக் கொண்டே, மாடிக்கும், மனைக்குமாக உருண்டோடிக் கொண்டிருந்தாள். எல்லோரும் அவள் அப்படிச் செயல்படுவதைப் பார்த்துவிட்டு மனதுக்குள்ளும், வெளிப்படையாகவும் பாராட்டினார்கள ஆனால், அவளோ சமையல் அறைக்குள் வரும் சாக்கில் அங்கிருந்த ஜன்னல் வழியாக இளங்கோ அகப்படுகிறானா என்று பார்த்தாள். மொட்டை மாடிக்குப் போய் அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்து, வாய் குசலம் விசாரித்தாலும், கண்கள் இளங்கோவைத் தேடின. காதல் கண்மூடித்தனமானது என்பதைக் காட்டுவது போல், அவன் மேலே இருப்பான் என்பது போல் ஆகாயத்தைக்கூடப் பார்த்தாள்.
ரமணன் வீட்டு மொட்டை மாடி அலங்காரம் செய்யப் பட்டது போல் தோன்றியது. சபாரி போட்டவர்கள், தலைக்கு டை அடித்து, காதோரம் நரைமுடி காட்டி, 'சுயமுடி' வெளிப்பட நின்றவர்கள், அறுபது வயது ‘டீசட்'டைகள், பட்டுப் புடவைகள், சல்வார் கம்சுகள், பாவாடைத் தாவணிகள்...
த.வ.ந.ச. வின் கூட்டம் - அதாவது தமிழ்த்தாய் நகர் வசிப்போர் நல்வாழ்வு சங்கத்தின் அவசரக் கூட்டம் அங்கே நடக்கப் போகிறது.
இப்போது இந்த தமிழ்த்தாய் நகர், சென்னை பெருநகர் சீமாட்டிக்கு மையிட்ட கண்ணாய் விளங்குகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாலும், கெஜடட் ஆபீஸர்களாலும், பாரின் ரிட்டன்களாலும் பளபளக்கிறது. ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதி, நகைநட்டுப் போடாத ஒரு நாட்டுப்புறப் பெண்ணாகவே இருந்தது. அப்போது பிழைக்கத் தெரிந்த ஒரு பெட்டிக் கடை மலையாளி, ரெவின்யூ இன்ஸ்பெக்டரை மாமூலாக்கி, இருபது கிரௌண்ட் புறம்போக்கு இடத்தை பிளாட் போட்டார். மற்றவர்களையும் அப்படிப் போட வைத்தார்.பிளாட் போட இடம் கிடைக்காத ஒரு ஆசாமி கொடுத்த மனுவின் அடிப்படையில், அரசாங்கம், இந்த பிளாட்டுகளை முடக்கப் போனது. ஆனால், பிளாட்காரர்களோ, அந்த பிளாட்டுகளை, எந்த அதிகாரிகளை மடக்கிப் போட வேண்டுமோ, அவர்களுக்கே பாதியை, மலிவு விலை மது விலையில்