Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 10 - சு. சமுத்திரம்
இளங்கோ, அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து ஒருமணி நேரத்திற்கும் அதிகமாகி விட்டது என்பது, அவனைத் தெரிந்து வைத்திருந்த அந்த ஏரியாப் பெண்களுக்குத் தெரிந்ததே தவிர, அவனுக்குத் தெரியவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 'சின்னதுகள், ‘சிறிசுகளிடம்’ சரோசா என்ற ரவுடிப் பெண்ணிடம், அவன் எப்படி அடிபட்டான் என்பதை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அவனை கதாநாயகனுக்கு எதிர்மாறானவன் போலவும் பார்த்தார்கள்.
இளங்கோவோ, அந்த நீண்ட நெடிய தெருவில், இரு முனைகளையும் மாறி மாறிப் பார்த்தான். பூக்காரி ருக்குமணியைக் காணவில்லை. இந்தக் கோயிலுக்கு ஒரு ஓரமாய் உட்கார்ந்தும், நின்றும் கொண்டே, பூ வாங்காதவர்களையும், அவள் வாங்க வைப்பதைப் பார்த்திருக்கிறான். பத்து பைசா உண்டி யலில் போட்டுவிட்டுப் போகிறவர்களையும், “ஏன் சாமி, இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தியாமே” என்று அந்த வார்த்தையை சங்கடப்பட்டு உச்சரித்துச் சொல்வாள். அவள் பேச்சு காதில் விழாத அளவுக்கு பிள்ளையாரிடம் பரவசத்தோடு ஐக்கியப் பட்டவர்கள் போல், 'பாவலா' செய்பவர்களைப் பார்த்து, "ஏன் சாமி, நான் கையிலதான் பூ வைச்சிருக்கேன், காதுல இல்லை. இந்த பிள்ளையார் பத்துப் பைசா தானா பெறும்” என்பாள். அதனால், இவள் இருப்பதனாலேயே பல பக்தகோடிகள் வருவதில்லை. இன்னும் சிலர் பிள்ளையாரை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள். அவளைப் பார்த்தும் ‘பகுத்தறிவாதிகள்' போல் பிள்ளையாரை ஏறிட்டுப் பாராமலேயே எதிர்த் திசையைப் பார்த்தபடி போவார்கள்.
இதற்கு மேலேயும், அங்கே நிற்பது இளங்கோவிற்கு என்னவோ போல் இருந்தது. அந்த இடத்தை விட்டு, அகலப்போன போது, பூசாரி பிள்ளையார் படம் போட்ட திரைச்சீலையை இழுத்து விட்டு, தன்னையும், பிள்ளையாரையும் மறைத்துக் கொண்டார். உள்ளே மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இதற்காகவே காத்திருந்தது போல், அக்கம் பக்கத்துக் கும்பல் கூடி, ஆண் வரிசையாகவும், பெண் வரிசையாகவும் பிரிந்தது. அனைவருடைய கவனமும் அந்தத் திரை எப்போது விலகும் என்பதிலேயே இருந்தது. சிலருக்கு பிள்ளையாருக்குப் பதிலாக 23ஆம் நம்பர் பஸ்ஸே மனதில் வந்த நின்றது. பலர் மனதிற்குள், தாமதப்படுத்தும் அந்த பூசாரியை திட்டிக் கொண்டார்கள். ஆனால், இளங்கோவிற்கோ சற்று நிம்மதி; இன்னும் சிறிது நேரம் அங்கேயே நிற்கலாம்.
இதற்கிடையே, மிஸ்டர். ரமணன் அந்தப் பக்கம் வந்தார். இளங்கோவிற்குத் தெரியும், அவரிடம்