“அம்மாடியோ! அவர கண்ணால பார்க்க முடியுமா?"
“நிச்சயமா...”
பூக்கார ருக்குமணிக்கு, இதயம் குதிபோட்டது, சுற்றுப்புறச் சூழலில் கான்ஸ்டபிளை ஜமீன்தாராகவும், சப்-இன்ஸ்பெக்டரை ராசாவாகவும், இன்ஸ்பெக்டரை ராசாதி ராசாவாகவும் நினைத்துப் பழக்கப்பட்டவளான ருக்குமணி, அவர்களுக்கு மேலே மாரியாத்தா ஒருத்திதான் இருக்க முடியும் என்று நம்பினாள். அவர்களுக்கும் மேலேயும் ஓர் ஆசாமி இருந்தால், அவரைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்பது போல புடவை தூசியைத் தட்டிவிட்டாள். அதே சமயம் ஒருத்தி செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம் ஆவதற்கு, தானோ தனது குழந்தையோ காரணமாக இருக்கக்கூடாது என்று நினைத்தது போலவும், இளங்கோவையே பார்த்தாள்.
இந்தச் சமயத்தில் பாமா தலைவிரி கோலமாக நடந்து வந்தாள். நொடிக்கு ஒரு தடவை தலை முடியை மேல் நோக்கி தூக்கி விடுகிறவள் கவிழ்ந்த முடியுடன், நிமிர்ந்த பார்வையோடு, அவர்களை நெருங்கி, ருக்குமணியை ஏற இறங்கப் பார்த்தபடியே, இளங்கோவைப் பார்த்துக் கத்தினாள் :
"நான் ஒருத்தி பிள்ளையார் கோவிலில் கல்லு மாதிரி உங்களையே பார்த்துகிட்டு நிக்கேன். அதுக்கு முன்னால, அப்பா டெலிபோன் செய்தவுடனேயே வீட்டுக்கு வந்திடுவீங்கன்னு வாசலுக்கும், புறக்கடைக்குமா அலைஞ்சேன். இங்க என்ன வேல உங்களுக்கு?"
"ஏம்மா, எது பேசணுமுன்னாலும் பக்கத்துல இருக்கிற பீச்சுல போய் பேசுங்க. நான் ஒருத்தி மூணாவது மனுஷி இங்க இருக்கேன்."
ருக்மணி, பூக்கூடையை தூக்கிக் கொண்டே சிரித்தாள். அந்தச் சிரிப்பில் பாமாவுக்குக் கோபமும் போனது, சந்தேகமும் போனது. இதற்குள், இளங்கோ ருக்குமணியின் சாகாத பயல் பற்றியும், மிஸ்டர் ரமணனின் வில்லத்தனம் பற்றியும் பாமாவிடம் விளக்கினான். பிறகு, சரோசாவைக் காப்பாற்ற வேண்டியது, ஒரு தார்மீகக் கடமை என்று வாதாடினான். அவன் சொல்வதை பெரிய மனுஷி போல் கேட்டுக் கொண்டு, பாமா, சம்மா நின்றாள். உடனே