தீபாவளி ஸ்பெஷல் சிறுகதை - தீவாளிக்கு லீவு! - ரவை
வீட்டுக்குள் நுழைந்தவாறே, சின்னசாமி சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டு, வலது கையை உயரே தூக்கி, முகத்தில் வெற்றிக் களிப்புடன் " எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே......" என்ற பாரதியின் பாடலை பாடிவந்தான்.
" என்ன சாமி! ரொம்ப குஷியிலே இருக்கீங்க.....?"
" ஆமாங்க,வள்ளி சொல்கிற மாதிரி, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க? என்ன விசேஷம்?"
" ரெண்டு பேரும் உட்கார்ந்து கேளுங்க, விவரமா சொல்றேன்....."
சின்னசாமியின் மனைவி மரகதம், சோபாவில் கணவனின் பக்கத்தில் அமர, வேலைக்காரி வள்ளி வீடு பெருக்கும் வேலையை நிறுத்திவிட்டு, தரையில் அமர்ந்தாள்.
சின்னசாமி உணவுப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் சூபர்வைசராகப் பணியாற்றுகிறார்.
அந்த தொழிற்சாலையில், வேலை செய்யும் ஆயிரம் ஊழியர்களின் சங்கத்துக்கு சின்னசாமிதான் தலைவன்.
ஊழியர்களுக்கு சில வருஷங்களாகப் போராடி ஊதிய உயர்வு, வாரம் இருநாட்கள் விடுமுறை, ஆண்டுக்கு ஒரு மாதம் லீவு, வீட்டு வாடகை அலவன்ஸ், போனஸ் என பல சலுகைகளை வாங்கித் தந்தவன்.
" நீ கேட்கிறது நியாயமான்னு உன் மனசாட்சியை தொட்டுப்பார்த்து சொல்லுன்னு முதலாளி கேட்கறான்......."
" அப்படி என்ன ஒப்புக்க முடியாத கோரிக்கை வைச்சீங்க?"
" தீவாளிக்கு விடுமுறை கேட்டேன், ....."
" அடப்பாவி! இதிலென்ன இருக்கு, மனசாட்சியை தொட்டுப் பார்த்துச் சொல்ல?"
" உனக்குத் தெரியுது, அவன் கேட்கிறான், தீவாளி வழக்கமான வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை தானே வருது, அதைத் தவிர, ஒருநாள் விடுமுறை எதுக்கு?ன்னு கேட்கிறான்........."
" ஓ! மறந்தே போச்சு! ஆமாம், தீவாளி ஞாயிற்றுக்கிழமைதானே வருது, நீங்க எதுக்கு அதைத் தவிர ஒருநாள் விடுமுறை கேட்டீங்க?"
" நல்லாயிருக்கே, கதை! நீயும் முதலாளிமாதிரியே கேட்கிறியே, வருஷாவருஷம் தீவாளிக்கு ஒருநாள் விடுமுறை உண்டா, இல்லையா? இந்த வருஷம், தீவாளி ஞாயிற்றுக்கிழமை வருதுங்கறதுக்காக, அந்த விடுமுறையை எப்படி மறுக்கலாம்? தீவாளின்னா, அதுக்குன்னு தனியா விடுமுறை தருவது, இன்னிக்கில்லை, நேற்றைக்கில்லை, பாட்டன் காலத்திலிருந்து வருவது, அதை எப்படி மறுக்கமுடியும்? இந்த விஷயத்திலே ஏதாவது தகராறு செஞ்சீங்கன்னா,